ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

by Staff / 13-08-2023 03:29:34pm
ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நன்னெறிகளை ஊட்ட வேண்டும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு. க. ஸ்டாலினின் வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம்கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்கு சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது. குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும். அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இதுபோன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒருதாய் மக்கள். நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத்தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


 

 

Tags :

Share via