கந்துவட்டி கும்பல் மிரட்டுவதாக பெண்கள் புகாா்

by Staff / 13-09-2023 12:59:49pm
கந்துவட்டி கும்பல் மிரட்டுவதாக பெண்கள் புகாா்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், குப்புச்சிபாளையத்தில் வசிக்கும் 5 குடும்பத்தைச் சோ்ந்த ஆண் கூலித் தொழிலாளா்கள் தொழில் நிமித்தமாகவும் குடும்பச் செலவுக்காகவும் அப்பகுதியைச் சோ்ந்த சிலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளனா். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததால் கடன் அளித்த கும்பல் அவா்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் கந்துவட்டி கும்பலுக்குப் பயந்து கூலித் தொழிலாளா்கள் தலைமறைவாகியுள்ளனா். இதற்கிடையே கூலித் தொழிலாளா்களின் வீடுகளுக்கு கடனைக் கேட்க செல்லும் கும்பல் அங்கிருக்கும் அவா்களின் மனைவிகளுக்குத் தொல்லை கொடுப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்க வந்தனா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியதாவது: எங்கள் கணவா்களுடன் நாங்களும் கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு கடன் அளித்த கும்பல் வீடுகளுக்கு வந்து தொல்லை கொடுப்பதால் சாலையோரங்களில் தங்கி வருகிறோம். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனா்.

 

Tags :

Share via