உள்ளாட்சி தேர்தல் ; அதிமுக தலைமை ஆலோசனை

by Editor / 12-08-2021 11:45:23am
உள்ளாட்சி தேர்தல் ; அதிமுக தலைமை ஆலோசனை

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில், விடுபட்ட மாவட்டங்களில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டது. இதனால், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளும் ஆலோசனை நடத்தி வருகிறது.

அந்த வகையில்,எதிர்க்கட்சியான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்படி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.இதில் தேர்தல் பணிக்குழு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில்,உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இரண்டாவது நாளாக தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.இவருக்கு சொந்தமான 60 இடங்களில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்,அவரது வங்கி கணக்கையும் போலீசார் இன்று முடக்கியுள்ளனர். இதனால்,இது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via