கோயம்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கலப்பட டீசல் கடத்தல் லாரிகள் பறிமுதல் - 10 நபர்கள் கைது

by Editor / 17-08-2021 09:31:30am
கோயம்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கலப்பட டீசல் கடத்தல் லாரிகள் பறிமுதல் - 10 நபர்கள் கைது

கோயம்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சேலம், சங்ககிரி, நாமக்கல், திருசெங்கோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறை அதிகாரிகள் கலப்பட டீசல் கடத்தல் லாரிகளை பறிமுதல் செய்தும் சம்பந்தப்பட்ட 10 நபர்களை கைது செய்தும், 7  வழக்குகள் பதிவு செய்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க கடுமையான நடவடிக்கை எடுக்க தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:

கோயம்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சேலம், சங்ககிரி, நாமக்கல், திருசெங்கோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறை கூடுதல் இயக்குநர், ஆபாஸ்குமார், அவர்களின் உத்தரவுப்படி, காவல் கண்காணிப்பாளர்கள் ஸ்டாலின், பாஸ்கர் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் பல குழுக்களாகப் பிரிந்து மேற்படி பகுதிகளில் கலப்பட டீசல் வாகன சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2 மாதங்களில் மட்டும் கலப்பட டீசல் சம்பந்தமாக மொத்தம் 07 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 26,400 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த டீசல் ஏற்றி வந்த 05 டேங்கர் லாரிகள் மற்றும் 03-Tata Ace வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  கடத்தல் செயலில் ஈடுபட்ட 10 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதில் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கள்ள சந்தை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் 13.08.21ஆம் தேதி சேலம் மாவட்டம் சங்ககிரி குப்பனூர் பிரிவு சாலையில் வாகன தணிக்கையின் போது அதிகாலை சுமார் 03.00 மணியளவில் கோவையிலிருந்து சேலம் நோக்கி வந்த TN-49-AM 9978 என்ற எண்ணுள்ள டேங்கர் லாரியில் சுமார் 4000 லிட்டர் அளவுள்ள கலப்பட டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, ஓட்டுநர் மதியழகன் (47) த.பெ. ராஜு மற்றும் க்ளினர் செல்வம் (26) த.பெ. சமுத்திரம் மற்றும் உரிமையாளர் இன்பராஜ் திருப்பூர் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

   பொள்ளாச்சி கே.ஜி. சாவடி எட்டிமடை கே.பி.எஸ் குடோன் அருகில் 12.08.21 ம் தேதி வாகனத் தணிக்கையில் 4000 லிட்டர் ஏற்றி வந்த லாரி TN 88 F 8767 மற்றும் TN 38 U 3594 என்ற TATA ACE வாகனங்களை ஓட்டி வந்த ஓட்டுனர்கள் சபாபதி மற்றும் செல்வ கருப்பையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via