பல்லடம் அருகே ஓடும் அரசு பேருந்தில் ரூ.1 சில்லறை கேட்ட நடத்துனருக்கு அடி உதை.

by Admin / 03-01-2022 11:23:19am
பல்லடம் அருகே ஓடும் அரசு பேருந்தில் ரூ.1 சில்லறை கேட்ட நடத்துனருக்கு அடி உதை.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து P8 என்ற நகர பேருந்து ஒன்று மாலுமிச்சம்பட்டி நோக்கி சென்றுள்ளது. பேருந்தை பல்லடம் செம்மிபாளையத்தை சேர்ந்த ஓட்டுநர் கல்யாண சுந்தரம் (48) ஓட்டிச் சென்றுள்ளார். பேருந்தில் நடத்துனராக பொள்ளாச்சி சூலேஷ்வரன்பட்டியை சேர்ந்த அங்கமுத்து (46) பணியில் இருந்துள்ளார். 60 க்கும் மேற்பட்ட பயணிகளும் இருந்துள்ளனர்.
  
பேருந்து, செட்டிபாளையம் சாலையில் அய்யம்பாளையம் அருகே ஆலமர நிறுத்ததை கடந்த போது, அய்யம்பாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ரதீஸ் (20), ப்ரனேஷ்வரேன் (20), செல்வம் (20) ஆகிய மூன்று தொழிலாளர்களும் மதுப்போதையில் பேருந்தில் ஏறியதாக கூறப்படுகிறது.

மூன்று பயணச்சீட்டுக்கு ரூ. 21 கொடுக்க வேண்டிய நிலையில் ரூ.50 ஆக கொடுத்துள்ளனர். படியில் தொங்கிய நிலையில் முகக்கவசம் அணியாமல் பயணித்த அவர்கள் மூவரும் ஆலமர நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்துமாறு கூறி இறங்கியதோடு, நடத்துனரிடம் சில்லறை கேட்டுள்ளனர்.
 
பின்னர், பேருந்து நடத்துனர் அவர்களிடம் 30 ரூபாயை கொடுத்துவிட்டு ஒரு ரூபாய் சில்லறை கேட்டுள்ளார். தங்களிடம் சில்லறை என்றும் ஒரு ரூபாய் கொடுக்க முடியாது என்றும் அந்த இளைஞர்கள் ஆபாச வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
 
இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு, அந்த இளைஞர்கள் நடத்துனரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். காயமடைந்த நடத்துனர் அங்கமுத்துவை மீட்ட பொதுமக்கள் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் பயணிகள் மற்றும் பேருந்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர்.   
  
மது போதையில் பேருந்து படிக்கட்டில் நின்ற படி பயணம் செய்ததோடு அல்லாமல் ஒரு ரூபாய் சில்லறை கேட்டு தர மறுத்து தன்னை தாக்கிய தொழிலாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


   

 


 

 

Tags :

Share via