தமிழருக்கு நேர்ந்த கொடூரம் குவைத் நாட்டில் துப்பாக்கியால் சுட்டு கொலை
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட லட்சுமாங்குடி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவரது மனைவி வித்யா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முத்துக்குமரன் தனது குடும்ப சூழல் கருதி வேலைக்கு செல்வதற்காக கடந்த மூன்றாம் தேதி குவைத் நாட்டுக்கு சென்றார். அங்கு சென்று வேலைக்கு சேர்ந்ததும் வேலை கடினமாக உள்ளதாக குடும்பத்தினரிடம் கூறிவந்துள்ளார்.
இந்த நிலையில் குவைத் நாட்டிற்கு சென்று நான்கு நாட்களிலேயே அதாவது 7ம் தேதி முத்துக்குமரன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த தகவல் கடந்த 9ம் தேதி திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடியில் இருக்கும் முத்துக்குமரனின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து விசாரித்ததில் முத்துக்குமரன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டது. முதன்முறையாக வெளிநாடு சென்றுள்ள முத்துக்குமரனுக்கு யாரிடமும் எந்தவித முன் விரோதமும் இல்லாத நிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
எனவே முத்துக்குமரன் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் அவரது மரணத்திற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தர வேண்டும். முத்துக்குமரனை இழந்து வாடும் குடும்பத்திற்கு இழப்பீடுகளை பெற்றுத் தர வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
Tags :