சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு அரசு மருத்துவமனை ஊழியர் நீதிமன்றத்தில் சாட்சியம்
சாத்தான்கும் வியாபாரிகள் இரட்டை கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 பேர் கைதாகி, மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடக்கிறது. ஏற்கனவே இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை சிபிஐ போலீசார் தாக்கல் செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பத்மநாபன் முன் வழக்கின் கைதான 9 போலீசாரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவ்வழக்கில் சாத்தான்குளம் அரசு மருத்துவமனை ஊழியர் நடராஜன் என்பவர், நீதிபதி முன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அதில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காயத்துடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது மற்றும் அவர்களது காயத்தின் தன்மை குறித்து நீதிபதி முன் சாட்சியம் அளித்தார். அப்போது அவரிடம் குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை நவ.16க்கு தள்ளி வைத்தார். அன்றைய தினம் அரசு மருத்துவ மனை செவிலியர் உள்ளிட்டோர் சாட்சியம் அளிக்க உள்ளனர்.
Tags :