வரலாற்றில் இன்று (31 அக்டோபர்)

by Editor / 31-10-2022 09:10:05am
வரலாற்றில் இன்று (31 அக்டோபர்)

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒற்றுமை தினமாக மத்திய அரசு அனுசரிக்கிறது.

நம் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் விஷயங்களை எதிர்த்து நிற்க, நமக்குள் இருக்கும் உள்ளார்ந்த வலிமையையும், எதிர்த்து நிற்கும் திறனையும் உறுதி செய்ய, இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

சர்தார் வல்லபாய் படேல்

 இந்தியாவின் 'இரும்பு மனிதர்" என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேல் 1875ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி குஜராத்தில் பிறந்தார்.

 அகமதாபாத்தில் வக்கீல் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்சனைகளுக்கு உதவி பிரபலமானார். 1917ஆம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்திஜியின் உரையைக் கேட்டவர், வக்கீல் தொழிலை உதறி சுதேசி இயக்கத்தில் இணைந்தார்.

 குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம். ஆங்கிலேய அரசிடம் வரி விலக்கு கேட்டு விவசாயிகள் போராடினர். அரசு பணியாததால் காந்தி, படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. அரசு பணிந்து வரியை ரத்து செய்தது. படேலின் முதல் வெற்றி இது!

 பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது. அப்போதிருந்து மக்களால் 'சர்தார்" என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

 சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.

 நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான் உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. வி.பி.மேனனுடன் இணைந்து அகண்ட பாரதத்தை அமைத்தார். இவர் 75-வது வயதில் (1950) இறந்தார். 1991-ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது..

 

Tags :

Share via