புதிய படகு தளம் ரூ 7 கோடியில் அமைகிறது

by Staff / 16-02-2023 04:56:47pm
 புதிய படகு தளம் ரூ 7 கோடியில் அமைகிறது

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயி ரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இந்த 3 படகுகளை நிறுத்துவதற்காக கன்னியாகுமரி வாவ துறை கடற்கரை பகுதி யில் படகுத்துறை அமைந்துள்ளது.

இதற்கிடையில் சுற்றுலாத்துறை மூலம் ரூ. 8 கோடி செலவில் வாங்கப்பட்ட தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய 2 புதிய அதிநவீன சொகுசு படகுகளும் தற்போது இந்த படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதிய அதிநவீன சொகுசு படகுகள் வடிவமைப்பில் பெரியதாக உள்ளதால் படகு தளத்தில் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லை.இதனால் இந்த 2 புதிய படகுகளும் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக் படகுத்துறையில் உள்ள படகு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 2 புதிய படகுகளும் தற்போது கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகிக் கொண்டிருக்கிறது.அது மட்டுமின்றி படகுத் துறையில் 2 புதிய படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் கடும் இட நெருக்கடிஏற்பட்டு உள்ளது.

படகுத் துறையில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி காரணமாக சில சமயங்களில் கடல் சீற்றத்தினால் படகுகள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி சேதம் அடைந்து வருகின்றன. இதைத்தொடர்ந்து இட நெருக்கடியை சமாளிக்க இந்த படகுத்துறையின் தெற்கு பக்கம் உள்ள கடல் பகுதியில் கூடுதலாக ஒரு புதிய படகு தளம் அமைக்க சுற்றுலாத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த புதிய படகு தளம் ரூ. 7 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்டமதிப்பீட்டை மீன்வளத்துறைபொறியியல் பிரிவைச்சேர்ந்த பொறியியல் வல்லுனர்கள் தயாரித்து உள்ளனர். இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக இந்த படகுதளம் கட்டுவதற்கான சிமெண்ட் பிளாக்குகள் தயாரிக்கும் பணி கன்னியாகுமரியில் தீவிரமாக நடந்து வருகிறது.100-க்கும்மேற்ப ட்ட சிமெண்ட்பிளாக்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

 

Tags :

Share via