ரயிலில் இருந்து தவறி விழுந்த காவலர் உயிரிழப்பு...

by Admin / 26-08-2021 05:29:25pm
ரயிலில் இருந்து தவறி விழுந்த காவலர் உயிரிழப்பு...

சென்னையில் ரயிலில் இருந்து தவறி விழுந்து சிறப்பு காவல்படை காவலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சென்னை மேல்கோட்டையூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் மோகன் (41). இவர் 2002 ஆம் ஆண்டு இரண்டாம் நிலைக் காவலராக பணியில் சேர்ந்து சிறப்புக் காவல்படையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று காலை பணிக்காக கிளம்பிய அவர் ராமேஸ்வரம் விரைவு ரயிலின் வாயில் பகுதியில் நின்றுகொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

ரயில் சேத்துப்பட்டு-எழும்பூர் பகுதிகளுக்கு இடையே வந்துகொண்டிருந்தபோது காவலர் மோகன் கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே மோகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த எழும்பூர் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடம் வந்து காவலர் மோகனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து எழும்பூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணிக்காக வந்த காவலர் ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via