திருக்கோயில் சொத்து ஆவணங்களை  இணையத்தில் பதிவேற்ற அமைச்சர் உத்தரவு

by Editor / 19-05-2021 04:41:05pm
திருக்கோயில் சொத்து ஆவணங்களை  இணையத்தில் பதிவேற்ற அமைச்சர் உத்தரவு


 

இந்து சமய அறநிலையத்துறை பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர் பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில்நடைபெற்ற கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தரவு சேகரிக்கும் பணிகள் மற்றும் இணையப் பதிவேற்றம் குறித்து அமைச்சர் தலைமையில் துறை அலுவலர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
துறை அலுவலர்களுடன் நடத்திய ஆய்வில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அமைச்சர் உத்தரவிட்டார்.
1. திருக்கோயில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள் மற்றும் விழாக்கள் போன்ற தகவல்களை இணையத்தில் வெளியிடுதல்.
2. திருக்கோயில்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு பதிவேடுகளை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்தல்.
3. திருக்கோயில் நிலங்கள் மற்றும் கட்டடங்களின் விவரங்களை, பொதுமக்கள் கணினிவழியில் பார்வையிடும் வகையில் புவிசார்குறியீடு செய்து இணையத்தில் வெளியிடுதல்.
4. திருக்கோயில் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளின் உரிமை ஆவணங்களை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்றுதல்.
5. திருக்கோயில் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்றல், நியாய வாடகை வசூலித்தல் மற்றும் திருக்கோயில் வருவாயினங்களைப் பெருக்கும் வகையில் விரைந்து செயல்படுதல்.
 ஆய்வுக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப.,, கூடுதல் ஆணையர் (நிர்வாகம்), பெ.இரமண சரஸ்வதி இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் (விசாரணை) ந.திருமகள், இணை ஆணையர்கள், மற்றும் தலைமையிட அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via