கள்ளநோட்டை கொடுத்து பொருட்கள் வாங்க முயன்ற கார் டிரைவர் கைது
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவிகா ரோடு அருகே உள்ள சிவா பில்டிங் லைன் பகுதியில் முகிலன் (வயது 40) என்பவர் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த கடைக்கு வந்த ஒருவர் கடையில் சாம்பிராணி வாங்கி உள்ளார். பின்னர் அதற்கு ரூ. 500-யை கொடுத்துள்ளார். அப்போது அந்த பணத்தை முகிலன் சோதனை செய்து பார்த்தபோது, அது கள்ளநோட்டு என தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக அவர் கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் விதின்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கள்ளநோட்டை கொடுத்த நபரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.விசாரணையில், அவர் பசுபதிபாளையம் அருகே உள்ள இராமானு பகுதிக்குட்பட்ட ராஜா நகரை சேர்ந்த ரெங்கராஜ் (வயது 51) என்பதும், அவர் கார் டிரைவராக வேலை செய்தது தெரியவந்தது. பின்னர் அவரிடமிருந்த 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 5, 200 ரூபாய் கள்ளநோட்டு ஒன்று, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் ரெங்கராஜை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :