முன்னாள் எம்.பி., திட்டம்போட்டு கொலை - 5 பேர் கைது
திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்.பி., மஸ்தான். சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த இவர் கடந்த 22ஆம் தேதி காரில் சென்று கொண்டிருந்த போது ஊரப்பாக்கத்தில் வைத்து திடீரென மரணம் அடைந்தார். காரில் சென்று கொண்டிருந்தபோதே நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.மஸ்தானின் மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் அன்று மாலையில் நடைபெற இருந்த நிலையில் திடீரென உயிரிழந்தது அவரது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. திமுகவினர் இடையேயும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் மஸ்தான் உயிரிழந்து இருந்ததால் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.மஸ்தானின் முகத்தில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமோ? என்கிற சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் அதனை உறுதிபடுத்தும் வகையில் அதிரடி திருப்பமாக மஸ்தானை அவரது உறவினர்களே திட்டம்போட்டு கொலை செய்திருப்பது இன்று அம்பலமாகி உள்ளது.
இதுதொடர்பாக மஸ்தானின் கார் டிரைவர் இம்ரான், உறவினரான சித்தா டாக்டர் சுல்தான் அகமது, நண்பர்கள் நசீர், தவ்பீக், லோகேஷ் ஆகிய 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சுல்தான் அகமது மஸ்தானின் சகோதரர் மருமகன் ஆவார். மஸ்தான் கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது.பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் மஸ்தானை 5 பேரும் திட்டமிட்டு கொலை செய்திருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மஸ்தான் மகனின் திருமண அழைப்பிதழை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்கி வந்தார். இதற்காக மஸ்தான் காரில் வெளியில் செல்லும் போது அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். அதற்கான நேரம் பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் தான் கடந்த 22ஆம் தேதி மஸ்தான் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியில் புறப்பட்டார்.ஊரப்பாக்கம் பகுதியில் வைத்து காரில் சென்றபோது கார் டிரைவர் இம்ரானின் துணையுடன் மஸ்தானை கொலை செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஊரப்பாக்கம் அருகே காரை சாலை ஓரமாக நிறுத்தி காருக்குள் வைத்தே வாயில் துணியை அமுக்கியும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.பின்னர் டிரைவர் இம்ரான் நெஞ்சுவலியால் மஸ்தான் உயிரிழந்ததாக நாடகமாடி உள்ளார். போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தி கொலை சம்பவத்தை வெளியில் கொண்டு வந்துள்ளனர். இக்கொலை சம்பவம் உறவினர்கள் மற்றும் திமுகவினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Tags :