அதிமுக பொதுக்குழு செல்லுமா?.. நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்..

by Editor / 01-09-2022 09:40:44pm
அதிமுக பொதுக்குழு செல்லுமா?.. நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்..

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு செல்லாது, ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு கடந்த 25ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் வைத்தியநாதன், அரியமா சுந்தரம், விஜயநாராயணன், ஆகியோர் வாதிட்டனர். ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் வாதிட்டனர். ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பும்,  கட்சி விதிகளின்படி பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும்தான் கூட்ட முடியும், தலைமை அலுவலகம் அல்ல என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் உயர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.

வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகின்றனர்.

 

Tags :

Share via