கூட்டு பாலியல் வன்கொடுமை:கேந்திர வித்யாலயா பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை

by Editor / 08-10-2022 11:20:59pm
கூட்டு பாலியல் வன்கொடுமை:கேந்திர வித்யாலயா பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை

டெல்லியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 11 வயது மாணவி பயின்று வருகிறார். அந்த மாணவி வகுப்பறைக்கு செல்லும்போது எதிர்பாராத விதமாக 2 சீனியர் மாணவர்கள் மீது மோதியுள்ளார். இதில், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவர்களிடம் அம்மாணவி மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், ஆத்திரமடைந்த இரு மாணவர்களும் மாணவியை கடுமையாக தாக்கியுள்ளனர்.
பின்னர், அந்த மாணவியை பள்ளிக்கூட கழிவறைக்கு இழுத்து சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி ஆசிரியரிடம் புகாரளித்துள்ளார். ஆனால், மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக கூறி இந்த விவகாரத்தை பள்ளி நிர்வாகம் மூடி மறைத்துள்ளது. இச்சம்பவம் கடந்த ஜூலை மாதம் அரங்கேறியுள்ளது. சீனியர் மாணவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவி தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தற்போது வெளிச்சத்துக்கு வந்த நிலையில் இந்த விவகாரத்தை டெல்லி மகளிர் ஆணையம் கையில் எடுத்துள்ளது. கேந்திர வித்யாலயா பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்கள், சம்பவத்தை மறைத்த பள்ளி ஆசிரியர்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via