கேரள இளம்பெண் மரணம்:கணவர் கொன்றதாக குற்றஞ்சாட்டு

by Editor / 23-06-2021 07:56:32pm
 கேரள இளம்பெண் மரணம்:கணவர் கொன்றதாக குற்றஞ்சாட்டு

 

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான விஷ்மயா நாயர் என்ற பெண் கணவர் இல்லத்தில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கணவன் தன்னை கொடுமைப்படுத்துவதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது உறவினருக்கு வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் அனுப்பியுள்ளார். உடலில் ஏற்பட்டுள்ள காயங்களையும் மெசேஜ் செய்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் உள்ள பாத்ரூமில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது கொலை என விஷ்மயாவின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷ்மயாவின் உடல் உடல்கூறாய்வு செய்வதற்காக திருவணந்தபுரம் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விஷ்மயா இறுதியாண்டு ஆயுர்வேத மருத்துவம் படித்து வந்துள்ளார். இவருக்கு கிரண்குமார் என்பவருக்கும் கடந்தாண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்துள்ளது. பெற்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட திருமணம். கிரண் குமார் மோட்டார் வாகனத் துறையில் பணியாற்றி வருகிறார். திருமணத்தின் போது 100 சவரன் நகை, ஒரு ஏக்கர் நிலம் மற்றும் ஒரு டொயோட்டா காரை வரதட்சனையாக கொடுத்துள்ளனர். திருமணமான கொஞ்ச நாளில் விஷ்மயா வீட்டிற்கு இருவரும் வந்துள்ளார். குடிபோதையில் இருந்த கிரண் விஷ்மயாவை அவரது குடும்பத்தினர் முன்னிலையில் தாக்கியுள்ளார்.
அந்தப்பெண்ணின் சகோதர் கேட்டதற்கு அவரையும் தாக்கியுள்ளார். இதனையடுத்து அந்தப்பெண்ணின் குடும்பத்தினர் ரோந்து பணியில் இருந்த போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து கிரணை காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பின்னர் கிரண் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் வைத்து சமாதானம் செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பின் அந்தப்பெண் தாய் வீட்டிலே இருந்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு பரீட்சை எழுதுவதற்காக கல்லூரிக்கு சென்றுள்ளார். அங்கு வந்த அவரது கணவர் அவரை கூட்டிச் சென்றுள்ளார். அதன்பின்னர் தனது தாயிடம் மட்டுமே அந்தப்பெண் பேசியுள்ளார்.
இந்நிலையில்தான் கணவர் கொடுமைப்படுத்துவதாக தனது உறவினருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார். முடியைப்பிடித்து தாக்கியதாகவும், கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த மெசேஜில் தெரிவித்திருந்தார். மேலும் கணவர் தினமும் வேலையை விட்டு வீடு திரும்பியதும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தந்தையைப் பற்றி இழிவான சொற்களில் பேசுவதாகவும் கூறி கண்ணீர்வீட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து இரண்டு நாளில் அந்தப்பெண் இறந்திருப்பது குடும்பத்தினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து பேசிய சூரநாடு காவல்நிலைய போலீஸார், “இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனைக்கு பின்னரே மரணத்துக்கான காரணம் தெரிய வரும்” எனத் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via