பள்ளி மாணவியை திருமணம் செய்த லாரி டிரைவர் கைது

by Staff / 18-02-2023 01:21:37pm
பள்ளி மாணவியை திருமணம் செய்த லாரி டிரைவர் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் மகேஸ்வரன் (வயது 24) லாரி டிரைவர். இவர் கள்ளக்குறிச்சிக்கு லாரியில் பாரம் ஏற்றிச்சென்று வந்த போது, அதே ஊரை சேர்ந்த 16 வயதுடைய 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம்காதலாக மாறியது. இதனால் கடந்த 10 மாதங்களாக 2 பேரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த மாணவியின் பெற்றோர் சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு மாணவியை அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி அன்று மகேஸ்வரன் மல்லூரில் உள்ள அந்த மாணவி இருக்கும் இடத்துக்கு சென்றுள்ளார். செல்போனில் மாணவியை தொடர்ந்து, ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று ஒரு கோவிலில் திருமணம் செய்துள்ளார். இதையறிந்த அந்த மாணவியின் உறவினர்கள் கொண்டலாம்பட்டியில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியையும், மகேஸ்வரனையும் தேடி வந்தனர்.

இதனிடையே அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார் நேற்று அங்கு சென்று மாணவியை மீட்டனர். தொடர்ந்து 16 வயது மாணவியை திருமணம் செய்த மகேஸ்வரனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். மேலும் மாணவியை சேலத்தில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
 

 

Tags :

Share via