மனைவியை மருமகனுடன் சேர்ந்து வெட்டிக்கொன்றவர் கைது 

by Editor / 19-07-2021 06:27:32pm
மனைவியை மருமகனுடன் சேர்ந்து வெட்டிக்கொன்றவர் கைது 


நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டி வெப்பல்தெருவை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி ராஜலெட்சுமி (45). இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்தார். இவரது மகள் அனிதா. அனிதாவிற்கும் கல்லத்தியை சேர்ந்த அபிமன்யூ (33) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

சமீபகாலமாக அனிதாவிற்கும், அவரது கணவர் அபிமன்யூவிற்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கணவருடன் ஏற்பட்ட தகராறில் அனிதா தனது இரு மகள்களுடன் கணவர் அபிமன்யூவை பிரிந்து தனது தாயார் ராஜலெட்சுமியுடன் வசித்து வருகிறார்.

இதனிடையே ராஜலெட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த அன்பழகனுக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த கணவர் வேலாயுதம் மனைவி ராஜலெட்சுமியை கண்டித்தார். எனினும் அவர் அன்பழகனுடனான கள்ளத் தொடர்பை கைவிடவில்லை.

இந்நிலையில் அபிமன்யூ தனது மகள்களை பார்ப்பதற்காக நேற்று இரவில் மாமியார் ராஜலெட்சுமியின் வீட்டிற்கு வந்தார். அப்போது ராஜலெட்சுமியும், அவரது கள்ளக்காதலன் அன்பழகனும் வீட்டில் உள்ள ஒரு அறையில் நெருக்கமாக இருந்ததாக தெரிகிறது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அபிமன்யூ தனது மாமனார் வேலாயுதத்திடம் கூறினார். அதன் பின் வேலாயுதமும், அபிமன்யூவும் சேர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்ட ராஜலெட்சுமி, அன்பழகன் ஆகிய இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதனையடுத்து  2 பேரும் தப்பி ஓடி விட்டனர். இதில் பலத்த வெட்டு காயம் அடைந்த ராஜலெட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அன்பழகன் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதுபற்றி மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாங்குநேரி டி.எஸ்.பி. ஸ்ரீலிசா ஸ்டெபல்லா தெரஸ் மற்றும் போலீசார் அன்பழகனை மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜலெட்சுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக பதிவு செய்த  போலீசார் ராஜலெட்சுமியின் கணவர் வேலாயுதம், மருமகன் அபிமன்யூ ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via