தமிழகத்தில் 100 நாளில் 1 கோடி பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

by Admin / 14-08-2021 01:35:21pm
தமிழகத்தில் 100 நாளில் 1 கோடி பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

 

4 மாதங்களுக்கு பிறகு 18 வயது பிரிவினருக்கு தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்ட போதிலும் அந்த பிரிவினர் அதிகளவு தடுப்பூசி செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 100 நாளில் 1 கோடி பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்
கொரோனா தடுப்பூசி
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

 3-வது அலை தாக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக பொதுமக்கள் தாமாக தடுப்பூசி போட முன் வருகிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரையில் 2 கோடியே 40 லட்சத்து 53 ஆயிரத்து 897 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

45 முதல் 60 வயது மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல்கட்டமாக முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் முதல் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் மற்ற பிரிவுகளை விட 18 முதல் 44 வயது பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகளவு தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள்.

கடந்த 100 நாட்களில் இந்த பிரிவில் 1 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். 18-44 வயது பிரிவைச் சேர்ந்த நடுத்தர வயதினர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அதிக ஆர்வம் காட்டுவதை இது குறிப்பிடுகிறது.

45-60 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 77 லட்சத்து 97 ஆயிரத்து 991 பேரும், 60 வயதுக்கும் மேற்பட்ட பிரிவில் 41 லட்சத்து 18 ஆயிரத்து 361 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

4 மாதங்களுக்கு பிறகு 18 வயது பிரிவினருக்கு தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்ட போதிலும் அந்த பிரிவினர் அதிகளவு தடுப்பூசி செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பூசி

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு தடுப்பூசி ஒதுக்கப்படுகிற அளவுக்கு ஏற்ப மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு மையங்களிலும் குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்தப்படுகின்றன.

நேற்று 2 லட்சத்து 55 ஆயிரத்து 868 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 92 ஆயிரத்து 334 பேருக்கும், 12-ந் தேதி 1 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கும், 11-ந்தேதி 1 லட்சத்து 53 ஆயிரம் பேருக்கும், 10-ந்தேதி 2 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via