மண் குளியல் சிகிச்சையின் மகத்துவம் !

by Editor / 30-08-2021 10:40:46am
மண் குளியல் சிகிச்சையின் மகத்துவம் !

உடல் நலனை குணமாக்க பல சிகிச்சை முறைகள் உள்ளன, அதில் சிறப்பான ஒன்றுதான் மண்குளியல். இதில் எந்தவித பக்க விளைவுகளும் இருக்காது, எனவே அம்முறையில் சிகிச்சை மேற்கொண்டு குணம் பெறலாம். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மண் குளியல் சிகிச்சை இலவசமாகத் தரப்படுகிறது. கோடைக் காலத்தில் அதிகரிக்கும் உடல் சூடு மற்றும் சருமப் பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வு தருவதால் பலரும் மருத்துவமனை சென்று மண் குளியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மண்ணில் இயற்கையிலேயே தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை நம் சருமத்தில் படும்போது பல்வேறு மருத்துவப் பலன்களை தருகிறது. இதை அடிப்படையாகக் கொண்டே மண் குளியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பூமியில் இருந்து மூன்று முதல் நான்கு அடி ஆழத்தில் மண் எடுக்கப்பட்டு அதிலுள்ள தேவையற்ற பொருள்களும், பெரிய கற்களும் நீக்கப்படும். பின்னர் அந்த மண்ணைச் சூரிய ஒளியில் உலர வைத்து அதிலுள்ள கிருமிகள் நீக்கப்படும். குளியலுக்காகப் பயன்படுத்தப்படும் மண்ணை ஒரு பாத்திரத்தில் எடுத்து நீர் சேர்த்து குழைவாகக் கரைக்க வேண்டும்.

உள்ளாடையை மட்டும் அணிந்து கொண்டு, உடலில் சூரியஒளி படுமாறு ஓர் இருக்கையில் அமர்ந்து கொண்டு தலைமுடி தவிர உடல் முழுவதும் மண்ணைப் பூசவேண்டும். அதன்பிறகு சூரிய வெளிச்சத்தில் சில நிமிடங்கள் நிற்க வேண்டும். பாதத்திலிருந்து மேல் நோக்கிப் பூசவேண்டும். சுமார் 30 நிமிடங்கள் சூரிய ஒளி உடலில் படுமாறு நின்றபிறகு குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
மண் குளியல் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் சிலவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சுயமாக இந்தக் குளியல் சிகிச்சை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான ஒருவர் முதல் முறையாவது இயற்கை மருத்துவர் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. அதன்பிறகு தாமாக எடுத்துக் கொள்ளலாம். மண் குளியல் சிகிச்சை எடுப்பவர்கள் வெறும் வயிற்றில் இருக்க வேண்டும்.----மருத்துவன் .

 

Tags :

Share via