தமிழகம் மு.க.ஸ்டாலின் தலைமையில் பீடுநடைபோடும் கே.எஸ்.அழகிரி வாழ்த்து
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை:-
கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க.வின் ஆட்சியை அகற்றி, மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சியை தி.மு. கழக தலைவரும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைந்திட தமிழக மக்கள் அமோக ஆதரவுடன் வாக்களித்து வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட முன்னேற்ற கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று கட்சியிலும், ஆட்சியிலும் நிர்வாக முத்திரைகளை பதித்த பெருமை அவருக்கு உண்டு. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை ஆட்சி மாற்றத்தை உறுதி செய்கிற வகையில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து, கூட்டணி அமைத்து மிகச் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இன்றைக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.
இத்தகைய வெற்றியை ஈட்டியதற்காக மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மிகமிக வித்தியாசமான, எவரும் இதுவரை செய்யாத வகையில் புரட்சிகரமான முறையில் பரப்புரை மேற்கொண்டதற்கு இன்றைக்கு பலன் கிடைத்திருக்கிறது. தமிழக மக்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கைக்கு ஈடு கொடுக்கிற வகையில் மக்களும் அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறார்கள்.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Tags :