மின்கட்டண உயர்வை மறைக்க ரெய்டு ஜெயக்குமார்

by Editor / 13-09-2022 11:48:26am
மின்கட்டண உயர்வை மறைக்க ரெய்டு ஜெயக்குமார்

அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. இவரது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம், காஞ்சிபுரம், சேலம், கோவை என 26 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.அதேபோல், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த, விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "முதலமைச்சர் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அதிமுகவை ஒழித்து விட வேண்டும் என்று செயலாற்றுகிறார். எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுக்க நினைக்கின்றனர் காவல் துறையை ஏவல் துறையாக பயன்படுத்துகின்றனர். மின்கட்டண உயர்வை மக்கள் மறக்க ரெய்டு நடக்கிறது" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via