சிறு, குறு, நடுத்தர மக்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது – அமைச்சர் செந்தில் பாலாஜி

by Staff / 16-09-2022 12:42:00pm
சிறு, குறு, நடுத்தர மக்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது – அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை, ராமநாதபுரத்தில் மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கிவைத்தார். காலை உணவாக கேசரி, ரவா உப்புமா, சாம்பார் உள்ளிட்டவை மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் அதிகாரிகள் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
முதல்வரின் காலை உணவுத் திட்டம் இன்று கோவையில் துவங்கப்பட்டது. வீட்டில்
சாப்பிடுவதைப்போல இருக்கின்றது என குழந்தைகள் சந்தோசப்படுகின்றனர். கோவையில் கடந்த ஆட்சியில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படவில்லை என்பது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சாலை பணிகளுக்காக 200 கோடி இந்த நிதி ஆண்டுக்குள் வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. 125 சாலைகளுக்கு 26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரும் மார்ச் மாத்த்திற்குள் 200 கோடி முதல்வர் வழங்க இருக்கின்றார். கோவை மாநகரில் பாதாள சாக்கடைக்கு விடுபட்ட பகுதிகளுக்கு 177 கோடி ரூபாய்க்கு
அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

மின் கட்டண மாற்றத்தின் விளக்கம் தெளிவாக ஒப்பீடுகளுடன் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது. 2010ஆம் ஆண்டு தமிழக மக்கள் செலுத்திய மின்கட்டணம், 2017ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஏற்றப்பட்ட மின் கட்டணம், 2022 மாற்றி அமைக்கப்பட்ட கட்டணம் ஆகிய ஒப்பீடுகளுடன் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பார்த்தாலே விளங்கும். அதிமுக ஆட்சியில் 64 முதல் 138 விழுக்காடு வரை உயர்த்தி இருக்கிறார்கள். 2.37 கோடி மின் நுகர்வோரில் ஒரு கோடி மின் நுகர்வோருக்கு எந்த கட்டணமும் இல்லை. 63.35 லட்சம் மின் நுகர்வோருக்கு இரண்டு மாதங்களுக்கு 55 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஏழை மக்கள் பாதிப்பில்லாத வகையில் மின் கட்டணம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு உயர்த்த திட்டமிடப்பட்ட கட்டணம் 3,217
கோடி ரூபாயினை குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல, சிறு குறு நடுத்தர தொழில் முனைவோருக்கு பிற
மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறைவான கட்டணம் நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது. HT தொழிற்சாலைகளுக்கும் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழகத்தில் குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடியவர்கள் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள கட்டண
விவரங்களைப் பார்த்தாலே தெரிந்து கொள்ள முடியும். சில நேரங்களில் மின் கட்டணம் அரசியல் ஆக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக விசைத்தறிகளுக்கு இந்தியாவிலேயே குறைந்த கட்டணம் தமிழகத்தில் தான் விதிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் விசைத்தறிகளுக்கு எச்.டி. கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் விசைத்தறிகளுக்கு அந்த கட்டணம் இல்லை. கடந்த அதிமுக ஆட்சியில் விசைத்தறிகளுக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்தினார்கள். இப்பொழுது எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். 70 பைசா மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே விசைத்தறிகளுக்கு குறைந்த கட்டணம் தமிழகத்தில் உள்ள
விசைத்தறிகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இழுத்து மூட வேண்டிய
நிலையில் இருந்த மின் வாரியத்திற்கு அரசு மானியம் வழங்கி நடவடிக்கை
எடுத்துள்ளது. 25 விழுக்காடு மட்டுமே மின் உற்பத்தி செய்கிறோம். மற்றவற்றை வெளியில் இருந்து தான் வாங்குகின்றோம். 2006 -11 ஆட்சியில் திட்டமிடப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் மாதம் 800 மெகா வாட் மின் உற்பத்தி திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.

மேலும், மின் கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 316 துணை மின் நிலையங்கள் டெண்டர் நிலைக்கு வந்துள்ளன. லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்த கேள்விக்கு, தமிழகம் முழுக்க 2016ம் ஆண்டு போட்டியிட்டபோது தாக்கல் செய்த சொத்து மதிப்பையும், 2021ம் ஆண்டு தாக்கல் செய்த சொத்து மதிப்பையும் ஆய்வு செய்தாலே 5 ஆண்டுகளில் சொத்து மதிப்பு உயர்ந்து இருக்கின்றது தெரியவரும். திமுக தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றி வருகின்றது. கடந்த ஆட்சியில் தவறு
செய்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு வருகிறது.மேலும், கரூர் மற்றும் கோவையில் செந்தில் பாலாஜி பற்றியும், திமுக அரசை
விமர்சித்தும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் குறித்த கேள்விக்கு, வேலையில்லாமல் தவறான எண்ணத்தோடு போஸ்டர் ஒட்டி மட்டமான அரசியல் செய்பவர்கள்
பற்றி பேசி நமது நேரத்தைக் வீணடிக்க வேண்டாம் என்றார்.

 

Tags :

Share via