துலாக்கட்டம்... தூய்மைப்பணி தொடங்கியது!

by Editor / 24-07-2021 08:05:11am
துலாக்கட்டம்... தூய்மைப்பணி தொடங்கியது!

மயிலாடுதுறை காவிரிக்கரையில் அமைந்துள்ள துலாக்கட்டம் புனிதமான பகுதியாகும். ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கங்கை நதியே தன் பாவத்தைப் போக்க துலாக்கட்ட காவிரியில் நீராடுவதாக ஐதிகம். கடைமுழுக்கு திருவிழா நடக்கும் நேரத்தில் மயிலாடுதுறையில் புகழ் பெற்ற ஐந்து கோயில்களிலிருந்து சுவாமிகள் புறப்பட்டு துலாக்கட்டத்தில் அணிவகுத்து நிற்க தீர்த்தவாரி நடைபெறும். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள்.

சுமார் ஒரு மாத காலத்திற்கு நடைபெறும் இத்திருவிழாவில் மயிலாடுதுறை நகரமே கண்ணைக் கவரும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருக்கும். மயிலாடுதுறை நகரத்திற்கு தனிப்பெருமை சேர்க்கும் திருவிழா இதுவாகும். அத்தகைய சிறப்புபெற்ற  துலாக்கட்டத்தில் தற்போது தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

துலாக்கட்டம் தற்போது மிகவும் மோசமான நிலையில் புல்புதர்களாலும், குப்பைகளாலும் மூடப்பட்டுக் கிடந்தது. மேலும் உடைந்த மதுபான பாட்டில்கள், அழுகிய பழங்கள் குவிந்து கிடந்தன. 'காவிரியில் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு இன்னும் சில தினங்களில் தண்ணீர் மயிலாடுதுறையை வந்தடைய இருக்கின்ற காரணத்தினால் உடனடியாக மயிலாடுதுறை துலாக்கட்டத்தை தூய்மை செய்திட வேண்டும்' என்று நகராட்சி நிர்வாகத்திற்குத் துலாக்கட்டப் பாதுகாப்பு குழுவினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.அதனையடுத்து நேற்றைய தினம் முதல் ஒரு வார காலத்திற்கு நகராட்சி தூய்மை பணியாளர்களின் உதவியோடு சுத்தம் செய்யும் பணி துவக்கப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் துலாக்கட்ட பாதுகாப்பு கமிட்டி தலைவருமான ஜெகவீரபாண்டியன் பணியைத் துவக்கி வைத்தார்.

நகராட்சி தூய்மைப் பணி மேற்பார்வையாளர் வீராங்கன் தலைமையிலான குழுவினர் 40 பேர் தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.தூய்மைப் பணி மேற்கொண்டு வருகின்ற நகராட்சி நிர்வாகத்திற்கு துலாக்கட்ட காவிரி பாதுகாப்பு குழுவினர் நெஞ்சார நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்கள்

துலாக்கட்டம்... தூய்மைப்பணி தொடங்கியது!
 

Tags :

Share via