எடப்பாடி பழனிச்சாமி சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை- பெரியகருப்பன்
தமிழக அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என ஆதாரத்துடன் நிரூபிப்போம் - அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி.
தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அரசு திட்டங்கள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்ய இன்று தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, கடையநல்லூர் அருகே உள்ள நயினாகரம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் பெரியகருப்பன், அங்குள்ள சமுதாய நலக்கூடம் மற்றும் அப்பகுதியில் வசித்து வரும் பொது மக்களிடம் குறை, நிறைகளை கேட்டு தெரிந்து கொண்டார்.
தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் அளித்த பேட்டியின் போது கூறியதாவது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் பல்வேறு சிறப்பான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு சிறப்பான ஆட்சி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்து தமிழக அரசு குறித்து கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அவர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் முன்னதாக 4 வருடங்களுக்கு மேல் முதல்வராக பணியாற்றிய அவருக்கு தெரியாத விஷயம் ஒன்றும் இல்லை. ஆனால், போற போக்கில் ஏதாவது குற்றச்சாட்டுகளை பதிவிட வேண்டும் என்பதற்காக அவர் பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
அவரது குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்களை தாங்கள் கண்டிப்பாக சமர்ப்பணம் செய்வோம் என பேசினார். மேலும், தமிழகத்தில் எதிர்காலத்தில் மேன்மேலும் சமத்துவ புரங்களை உருவாக்குவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
Tags :