என் அப்பாவுக்கு துரோகம் செய்தது யார் ? கவிஞர் தாமரைக்கு தியாகு மகள் கேள்வி!

by Editor / 24-07-2021 05:56:59pm
என் அப்பாவுக்கு துரோகம் செய்தது யார் ? கவிஞர் தாமரைக்கு தியாகு மகள் கேள்வி!


என் அப்பாவுக்கு துரோகம் செய்தது யார் ? என்று கவிஞர் தாமரைக்கு தியாகு மகள் கேள்வி எழுப்பிய விவகாரம் தற்போது வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த கடிதம் இதோ //

கவிஞர் தாமரை அவர்களுக்கு,   
நான் தோழர் தியாகுவின் மூத்த மகள் சுதா காந்தி எழுதுகிறேன். என் அப்பாவை நீங்கள் ஜூவி மூலம் அறிந்து அவரைப் பார்க்க முகவரி பெற்று என் வீட்டிற்கு வந்து என் அம்மாவை சந்தித்தது நினைவுள்ளதா? என் அப்பாவை சந்திக்கும் முன் நீங்கள் சந்தித்தது என் அம்மாவை. என் அம்மா இப்படி  ஒருவர் வந்தார் எனச் சொல்லித்தான் உங்களை என் அப்பாவிற்கு முதன்முதலில் தெரியும் என்பதை நினைவூட்டுகிறேன். அப்போது நீங்களும் உங்கள் திருமண வாழ்வில் இருந்தீர்கள், என் அப்பாவும் என் அம்மாவுடன் திருமண வாழ்வில் எங்களோடு இருந்தார். அன்று எங்கள் வீட்டில் இருந்த உங்களை ஒருமுறை பார்த்தேன். அதன்பின் உங்களை நான் சுவருக்குள் சித்திரங்கள் வெளியீட்டு விழாவில் பார்த்தேன்.


என் அப்பா உங்களை மணமுடிப்பது தொடர்பாக ஒரு பேருந்து பயணத்தில் என் அம்மாவிடம் தெரிவித்தார். பிள்ளைகளான எங்கள் இருவரிடம் கடற்கரையில் வைத்து தனது மணமுடிக்கும் முடிவைச் சொன்னார். அம்மாவும் சரி நாங்களும் சரி முடிவை ஏற்காது மறுத்துவிட்டோம். இதுவெல்லாம் உங்களுக்கே தெரியும். பிறகு நான் கல்லூரி படிக்கும் போது உங்களுக்கும் என் அப்பாவிற்கும் திருமணம் ஆனதை குமுதம் இதழ் மூலம் அறிந்தேன்.


எங்கள் பார்வையில் என் அப்பா செய்தது தவறுதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் எங்கள் இருவரையும் தொலைவில் இருந்தாலும் அரவணைத்து எங்களுக்குக் கல்வி தந்து எங்களை நல்ல நிலைக்குக் கொண்டு வந்து சேர்த்தார். என்ன இருந்தாலும் பிள்ளைகளுக்கு இது இழப்புதானே என்ற உணர்வோடுதான் அவர் எல்லாமுமாக அப்போதும் இருந்தார். இதோ இன்று எங்கள் அப்பாவை நானும் என் தங்கையும்தான் பார்த்துக் கொள்கிறோம்.

முழுக்க முழுக்க எங்கள் இருவர் பொறுப்பில் எங்கள் அணைப்பில்தான் அப்பா இருக்கிறார். என்ன இருந்தாலும் அப்பா எங்களுக்காகப் பட்டபாடுகள் அறிவோம். நாங்கள் எங்கள் அப்பாவை அதிகாரம் செலுத்த மகிழ்வோடு எங்களிடம் தன்னை அப்போதும் ஒப்புக் கொடுத்திருந்தார். எங்கள் மீதான அன்பிலும் பொறுப்பிலும் எந்தக் குறையையும் அப்பா வைத்ததில்லை. இன்றும் அந்த அன்புதான் என்னை எழுதத் தூண்டுகிறது.


நீண்ட காலமாக என் மனதை அரித்துக் கொண்டிருப்பதை உங்களிடம் கேட்டுவிட வேண்டும். மணமாகி ஒருவரோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் என அறிந்தும் கருத்து அறியும் வயதில் இரு பெண் பிள்ளைகள் இருப்பது தெரிந்தும் ஒருவரைத் திருமணம் செய்வதற்கு நீங்கள் எப்படி ஒப்புக் கொண்டீர்கள். கல்லூரி போய்க் கொண்டிருக்கிற பெண் பிள்ளை உண்டே. அவர்கள் மனம் என்ன பாடுபடும் என்று யோசித்திருக்க வேண்டுமா வேண்டாமா. எந்த யோக்யதையில் இன்று உங்கள் நியாயம் பற்றி பேச வருகிறீர்கள்.


நான் CMA முடித்து சட்டம் முடித்த பிறகு மலர் மருத்துவமனையில் கணக்கியலில் துணை மேலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். நீங்கள் என்னை அழைத்து உங்கள் வீட்டிற்கு வரச்சொல்லிக் கேட்டீர்கள். நானும் வந்தேன். என் அப்பா பற்றி குறிப்பாக நீங்கள் சொல்கிற அந்தப் பெண் குறித்துப் பேசினீர்கள்.  ஆதாரங்கள் எனச் சிலதைக் காட்டினீர்கள். மகளை அழைத்து அப்பா மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்ததில் உங்கள் மீது அருவருப்பே மிஞ்சியது.  


உங்கள் ஆதாரங்களும் அபத்தமானதாக இருந்தன. நீங்கள் நேர்மையற்றவர் என்பதை அந்த சந்திப்பில் புரிந்து கொண்டேன். இதை  இங்கே எடுத்துச் சொல்லக் காரணம் இருக்கிறது. அப்பாவை நீங்கள் மணமுடித்த பிறகு பத்தாண்டுகள் கழித்து அதாவது நான் என் கல்வியை எல்லாம் முடித்து ஒரு பணியில் அமர்ந்த பிறகுதான் உங்களிடம் இருந்து முதல் அழைப்பு வருகிறது. அதுவும் என் அப்பா மீது  குற்றஞ்சாட்ட. அப்பாவை நீங்கள் மணமுடித்த பத்தாண்டுகளில் என்னை அழைத்து என் படிப்பு என்ன? நன்றாகப் படிக்கிறேனா? என்றெல்லாம் ஒருமுறையேனும் விசாரித்ததுண்டா? இன்று வீட்டிற்கு அழைத்தால் வருவேன் பேசுவேன் என்ற நம்பிக்கை இருந்த உங்களுக்கு அதற்கு முன்னால் எங்கள் மீது அக்கறை கொண்டு ஒருமுறையாவது பேசியிருக்கலாமே! நீங்கள் அழைக்க வேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இருந்ததில்லை. அப்படி ஒரு நிலைக்கு அப்பா எங்களை விட்டதுமில்லை.


இப்போது அழைத்தது போல் அப்போது உங்களுக்கு அழைக்கத் தோன்றியது கூட இல்லை என்பதை எடுத்துக்காட்டவே சொல்கிறேன். நான் தியாகுவிடம் விசாரித்துக் கொண்டுதான் இருந்தேன் என நீங்கள் சொல்லலாம். இதையும் அவரிடமே விசாரித்து தீர்த்துக் கொள்ள வேண்டியதுதானே. மகளான என்னை அழைத்ததன் நோக்கம் என்ன? என்னை என் அப்பாவுக்கு எதிராக திருப்பும் உங்கள் கெட்ட எண்ணம்தானே! அன்று என் அப்பாவை மணம் முடிக்கும் போது பிள்ளைகளான எங்கள் குறித்து உங்களூக்கு எந்தக் கவலையும் இருக்கவில்லை. இன்று அப்பாவுக்கு எதிராக என்னைத் திருப்ப மட்டும் நான் உங்களுக்குத் தேவைப்பட்டோம். 


கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அப்பா ஒரு முறை என்னையும் என் தங்கையையும் பார்க்க வருகிறார். அவர் எங்களோடு நிதானமாக பேசுகிற நிலையில் இல்லை. அத்தனை அழைப்புகள் உங்களிடமிருந்து, எங்களைக் காணத்தான் வந்திருக்கிறார் என்று உங்களுக்கு நன்கு தெரியும். நீங்கள் கத்தி அப்பாவை உடனே வரச் சொல்லிக் கட்டளையிட்டது எங்களுக்கே கேட்டது. அத்தனை அழைப்புகளிலும் வந்துட்டு இருக்கேன் என்று சொல்லியே உங்களைச் சமாளித்துக் கொண்டிருந்தார். கடைசியாக நாங்கள் இன்னும் எத்தனை நேரம்தான் வந்துக்கிட்டே இருப்ப, நீ கிளம்பு என்று கோபமாகச் சொல்லி அனுப்பினோம். எங்களோடு அவர் நேரம் செலவிடுவதை எங்கள் மீதான பரிவின் பேரால் கூட உங்களால் பொறுத்திருக்க முடியவில்லை. இப்படிப்பட்ட குணம் கொண்ட உங்களுக்கு நீதி பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை.ஆனாலும் பேசுவது உங்கள் உரிமை. இனி அதனை எதிர்கொள்வதும் எனதுரிமை.


பெரியாரின் பெண் விடுதலை என்பது ஆண் பெண் சமத்துவம் என்றுதான் நான் புரிந்து வைத்திருக்கிறேன். ஆண் ஆதிக்கமும் இல்லை பெண் ஆதிக்கமும் இல்லை. உங்கள் முன்னால் கணவரோடு நீங்கள் மனமுறிவு பெற்றதும் நீங்கள் மறுமணம் புரிந்ததும் உங்களின் உரிமை. அதேபோல் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணோடு முற்றிய முரண்பாடுகளின் காரணமாகவும் அதைச் சரி செய்ய முடியாத போதும் மணமுறிவுக்கு முடிவு செய்வதையும், அதன் அடிப்படையில் அவர் அந்த உறவை முறித்துக் கொள்வதையும் ஏற்றுக் கொள்வதுதான் பெண்ணியத்தை முழுமைப்படுத்தும். என்னது மட்டும்தான் உரிமை ஒரு ஆணுக்கு அந்த உரிமை இல்லை என்பது பெண்ணியம் ஆகாது.

என் அப்பாவைப் பொறுத்தவரை என் அம்மாவை விட்டு அவர் பிரிந்து வந்து உங்களை மணம் முடிக்க உரிமையுண்டு, அதில் பிழையேதும் இல்லை என்று கருதிய நீங்கள், உங்களிடமிருந்து மணமுறிவு பெற்று அவரின் மூத்த மகளிடம் வந்து சேர்வதற்கு மட்டும் உரிமை இல்லை எனக் கருதுவதில் என்ன நியாயம் இருக்கிறது. நான் என்ன செய்திருந்தாலும் எப்படி நடந்து கொண்டாலும் எவ்வளவு முரண்பாடுகள் முற்றினாலும் வாழ்வு குறித்த மதிப்பீடுகளில் வேற்றுமை எவ்வளவு கூர்மையடைந்தாலும் என்னோடுதான் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கருதுவது பெண்ணியமல்ல. அப்படிக் கருதுவது சர்வாதிகாரம் ஆகுமே தவிர பெண்ணியமாகாது.

பெண்ணியம் பற்றி நான் உங்களுக்கு எடுத்துரைப்பது காலம் நிகழ்த்துகிற விந்தைதான். 
என் அப்பா மீது நீங்கள் புனைகிற குற்றசாட்டுகளை இனியும் அனுமதிக்க முடியாது. அதை நீதிமன்றம் கொண்டு செல்ல யாரும் உங்களைத் தடுக்கவும் இல்லை. நீதிமன்றம் செல்வதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் விசாரணைக் குழு செயல்படுவதற்கான வழிமுறைகளைக் காணுங்கள். இதில் எதுவானாலும் அதனை எதிர்கொள்ள அப்பா தயாராகவே இருக்கிறார், இருப்பார்.


இந்த முறையைத் தவிர்த்து நீங்கள் இனியும் இப்படிப்பட்ட பதிவுகளை இட்டால், என் அப்பாவின் உள்ளத் தூய்மையை நன்கு அறிந்தவள் உணர்ந்தவள்  என்ற முறையில் உங்களை நான் சளைக்காமல் எதிர்கொள்வேன்.இவ்வாறு சுதா தியாகு, கவிஞர் தாமரையை வறுத்தெடுத்திருக்கிறார். இந்த நீண்ட பதிவுக்கு நிச்சயம் தாமரை பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்

 

Tags :

Share via