பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் 2 பேர் கைது.
ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் இருவர் நிற்பதாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து அந்தப்பகுதியில் தீடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது அங்கு நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் ஆத்தூர் பேட்டை தெருவை சேர்ந்த கோபால் மகன் செந்தில் (எ) செந்தில்குமார் (41) மற்றும் கொழுவைநல்லூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த பெருமாள் மகன் சங்கர் (எ) சங்கரவேல் (42) என்பதும் அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரிகள் செந்தில் (எ) செந்தில்குமார் மற்றும் சங்கர் (எ) சங்கரவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரிகளில் செந்தில் (எ) செந்தில்குமார் மீது ஏற்கனவே ஆத்தூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 14 வழக்குகளும், மற்றொரு எதிரியான சங்கர் (எ) சங்கரவேல் மீது ஆத்தூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 7 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :