ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி மற்றொருவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

by Staff / 03-01-2023 01:18:47pm
ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி மற்றொருவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

கன்னியாகுமரி-நாகர்கோவில் ரெயில் பாதையில் உள்ளது சுக்குப்பாறை தேரிவிளை. இங்கு இன்று காலை சென்றவர்கள் ஆண் உடல் கிடப்பதை பார்த்தனர். இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவருக்கு சுமார் 32 வயது இருக்கலாம். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவர் தண்டவாளத்தை கடக்கும்போது ராமேசுவரம் ரெயிலில் அடிபட்டு இறந்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் அவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தாரா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியானவர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அந்தப் பகுதியில் ஒரு பையில் கற்கள் அதிக அளவில் இருந்தது. எனவே நாசவேலைக்கு யாரும் திட்டமிட்டார்களா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை-நாகர்கோவில் இடையே செங்குளம்-நாங்குநேரி ரெயில் பாதையில் உள்ள மூன்றடைப்பு பாலத்தின் கீழ் பகுதியில் வாலிபர் உடல் கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவர் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள கண்ணநல்லூரைச் சேர்ந்த முருகேசன் மகன் ஐயப்பன் (வயது 22) என தெரியவந்தது. மர ஆசாரியான அவர் கடன் தொல்லையால் நேற்று இரவு ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர் தற்கொலை செய்தாரா? ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தாரா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via