காதல் மனைவி கடத்தப்பட்ட சம்பவம் -செல்போனில் பேசும் ஆடியோ வெளியாகியது.

by Editor / 04-02-2023 11:39:50pm
காதல் மனைவி கடத்தப்பட்ட சம்பவம் -செல்போனில் பேசும் ஆடியோ வெளியாகியது.


தென்காசி மாவட்டம், இலஞ்சி அருகே உள்ள கொட்டாக்குளம் பகுதியை சேர்ந்த காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளான வினித்-கிருத்திகா தம்பதியினரை பிரித்து கிருத்திகாவை அவரது பெற்றோர்கள் கடத்திச் சென்றதாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் குறித்து குற்றாலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கிருத்திகாவை மீட்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருத்திகா வீடியோ ஒன்றை பதிவிட்டு வெளியிட்டிருந்தார். அதில், 'தன்னை யாரும் கடத்த வில்லை எனவும், தான் வேறொரு நபருடன் திருமணம் செய்து கொண்டதாகவும் பதிவிட்டு இருந்தார்.

 இந்த வீடியோ பதிவானது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. மேலும், வினித் கிருத்திகாவை மீட்டு தர கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த சூழலில், அந்த மனு கடந்த இரு தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, கிருத்திகாவை மீட்க தனிப்படை போலீசார் குஜராத் சென்றிருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த மனு மீதான விசாரணையை மார்ச் 1-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

இந்த நிலையில், கிருத்திகாவின் பெற்றோர்களுக்கு முன் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, முன்ஜாமின் கொடுப்பதற்கு போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த சூழலில், வழக்கு விசாரணையை வருகின்ற செவ்வாய் கிழமைக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில், கிருத்திகாவும் - வினித்தும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியது போன்ற ஒரு ஆடியோ அவரது வழக்கறிஞர் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.

 அந்த ஆடியோவில் கிருத்திகா பேசும்போது, 'தான் எந்த ஒரு மிரட்டலுக்கும் ஆளாகவில்லை எனவும், எனது வாழ்க்கையும் உனது வாழ்க்கையும் கருத்தில் கொண்டு தான் இது போன்ற முடிவை தான் எடுத்துள்ளதாகவும், ஆகவே நீ கொடுத்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு கேட்பது போன்று உள்ளது. '

 இந்த ஆடியோ தற்போது வெளியாகி உள்ள சூழலில், இந்த வழக்கில் நாள்தோறும் அடுத்தடுத்த பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via