தைப்பூசத்தையொட்டி லட்சக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்

வேலுண்டு வினையில்லை..கடவுள் முருகனுக்கு உகந்த நாள் தைப்பூசம். அந்த வகையில் இன்று தைப்பூசமாகும். அதனுடன் இன்று பவுர்ணமியும் சேர்ந்து வருகிறது. தைப்பூசத்தையொட்டி இந்து மதக்கடவுள் முருகன் வழிபாட்டு தலங்களில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தமிழ்காத்திலுள்ள புகழ் பெற்ற முருகன் கோவில்கள் அமைந்துள்ள திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம், மருதமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை உள்பட முருகக்கடவுள் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருச்செந்தூரில் கடலில் புனித நீராடி, மாலை அணிந்து, அலகு குத்தியும், காவடி எடுத்தும், அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். பழனியில் இன்று அதிகாலை 3 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை 3 மணி முதல் தற்போது வரை 1.10 லட்சம் பக்தர்கள் முருகனை தரிசித்துள்ளனர். பழனியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்செந்தூர் முருகன் கோவிலில் நள்ளிரவு 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் 6 மணிக்கு அபிஷேகமும் நடந்தது. நேற்று நள்ளிரவு முதலே பக்தர்கள் குவியத்தொடங்கினர். பக்தர்கள் கடலில் நீராடி முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமே உள்ளது.
Tags :