குழந்தைகள் உரிமையை பறிக்கக்கூடாது: அன்பில் மகேஷ்

by Staff / 01-05-2023 03:50:49pm
குழந்தைகள் உரிமையை பறிக்கக்கூடாது: அன்பில் மகேஷ்

சென்னையில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பை வலியுறுத்தி 445 இசைக்கலைஞர்கள் கீ போர்டு வாசித்த இசை நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார்.நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் குழந்தைகளின் உரிமையை யாரும் பறிக்கக் கூடாது எனக் கூறினார்.குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளியில் 445 இளம் இசை கலைஞர்கள் பங்கேற்று கீ போர்டு வாசிக்கும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சீர்காழி சிவசிதம்பரம், கலை மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குநர் காந்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதில், தமிழ்நாடு முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்து இசையுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து ஏ. ஆர். ரகுமான் இசையில் தாய் மண்ணே வணக்கம் என்ற பாடலுக்கு இசை கலைஞர்கள் கீ போர்டு இசைத்தனர். மேலும் இளையராஜா இசையமைத்த பாடலையும் வாசித்தனர்.இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. குழந்தை தொழிலாளர் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு தற்போது அவர்களின் உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளை வேலைக்கு அனுப்பக்கூடாது, கல்வியில் அவர்களுக்கு உரிமை வழங்க வேண்டும். குழந்தைகளின் உரிமையை யாரும் பறிக்க கூடாது என அரசு செயல்பட்டு வருகிறது. கரோனா காலத்தில் இந்தியாவில் சுமார் 50 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டனர். அவர்களை அதிகளவில் தமிழ்நாட்டில் இருந்து தான் மீட்டோம்.2586க்கு மேற்பட்ட குழந்தை தொழிலாளர்களை மீட்டு இருக்கிறோம். குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது பெரிய குற்றமாகும். குழந்தை தொழிலாளர்களை கண்டால் பொதுமக்கள் அரசுக்கு தகவல் கொடுக்க வேண்டும். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

 

Tags :

Share via