கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: ஓபிஎஸ்

by Staff / 11-07-2023 03:29:26pm
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: ஓபிஎஸ் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கினை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி வரும் ஆக. 1ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று காலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஓ. பன்னீர் செல்வம் பேசுகையில், ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாகவும், ஜெயலலிதா மிகவும் நேசித்த வசிப்பிடமாகவும் இருந்து வந்தது கோடநாடு பண்ணை பங்களா. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2017, ஏப்ரல் 24ஆம் தேதியன்று இரக்கமற்ற ஓர் அரக்கர் கூட்டம், அந்த கோடநாடு தோட்டத்திற்குள் புகுந்து அங்கே காவல் காத்து வந்த ஓம்பகதூர் என்கிற காவலாளியை கொலை செய்து, கிருஷ்ணபகதூர் என்னும் காவலாளியை கொடுங்காயப்படுத்தி, கொலை கொள்ளையை நிகழ்த்திய சம்பவம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இந்த சம்பவத்தை திட்டமிட்டு அரங்கேற்றியதாக சந்தேகிக்கப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் மற்றும் கோடநாடு பங்களாவில் சி. சி. டி. வி. மற்றும் கணினி உள்ளிட்ட பொறுப்புகளை நிர்வகித்து வந்த தினேஷ் என்கிற இளைஞர், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களை ஏற்பாடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சயான் என்பவரது மனைவி, மகள், மேலும் இந்தக் குற்றம் நிகழ்ந்த காலத்தில் கொடநாடு சரக காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்தவர் உள்ளிட்ட பலரது சந்தேக மரணங்கள், மர்ம விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று, மொத்தமாக 6 உயிர்கள் பறி போய்விட்ட நிலையில், இந்தக் கொடூரங்கள் நடைபெற்று ஏறத்தாழ 6 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவும் இல்லை, இந்தக் குற்றத்திற்கான நோக்கம், இந்த பாவக் காரியத்தை பின் இருந்து இயக்கியவர்கள் யார் என்பதையெல்லாம் கண்டறிவதற்கும், அவர்களை கடுமையாக தண்டிப்பதற்கும் முறையான நடவடிக்கைகள் இதுவரை உறுதியோடு மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டதாகவே கருதப்படுகிறது. விசாரணை மாடங்களும், விசாரிக்கப்படும் அமைப்புகளும் மாறுகிறதே தவிர இந்த வழக்கின் சூத்திரதாரி யார் என்பதும், இந்தக் குற்றத்தை முன்னின்று நடத்திய கொடூரன் யார் என்கிற முடிச்சு இன்றுவரை அவிழ்க்கப்படவில்லை. இவை யாவிற்கும் மேலாக மிகப் பிரசித்திப் பெற்ற தமிழகத்தின் செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, கொடநாடு கொலை, கொள்ளை குறித்து புலனாய்வு விசாரணை ஒன்றை நடத்தி கொடநாடு கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்திருக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களை அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று கலந்துரையாடியதில் இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்ய ஒருவர் தங்களிடம் வந்து பேரம் பேசியதாக அவர்கள் புகைப்படத்தைக் காட்டி அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்ட பிறகும்கூட இன்று வரை அதன்மீது எந்தவிதமான தொடர் நடவடிக்கைகளும், விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் தருகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய பல உயிர்கள் பறிபோன நிலையிலும், அந்தக் கொடூர நிகழ்வில் உயிரோடு தப்பித்து நேபாளத்திற்குச் சென்ற கிருஷ்ணபகதூர் என்கிற காவலாளியை இன்று வரை அழைத்து வந்து, அவர் கண்ணால் கண்ட அச்சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை ஏதும் காவல் துறையால் நடத்தப்படாமல் இருப்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை சட்டமன்றம் தொடங்கி, பொது வெளியிலும், குறிப்பாக 2021 தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் இச்சம்பவம் குறித்து பல சந்தேகங்களை மக்கள் முன் வைத்து பேசியவர் இன்றைய முதல்வரும், அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான மு. க. ஸ்டாலின்தான் என்பதையும், ஆட்சிக்கு வந்து 90 நாட்களுக்குள் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிப்போம் என்று மு. க. ஸ்டாலின் மக்களிடம் வழங்கிய வாக்குறுதியையும் நாடறியும்.
 

Tags :

Share via