பாஜக அலுவலகத்தில் அமைக்கப்பட்ட பாரதமாதாசிலையை அகற்றிய அதிகாரிகள்.

by Editor / 08-08-2023 09:01:15am
பாஜக அலுவலகத்தில் அமைக்கப்பட்ட பாரதமாதாசிலையை அகற்றிய அதிகாரிகள்.

விருதுநகர் நான்கு வழிச்சாலையில் பாஜ கிழக்கு மாவட்ட அலுவலகம் உள்ளது. இங்கு ஐந்தடி உயரத்தில் பாரதமாதா சிலை அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று அனுமதியின்றி பாரத மாதா சிலை அமைக்கப்பட்டது. குறித்து தகவலறிந்த வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பாஜக அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு அனுமதியின்றி பாரதமாதா சிலை வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அதிகாரிகள், அதனை அகற்றுமாறு கட்சி நிர்வாகிகளிடம் கூறினர். ஆனால் அகற்ற மறுத்த பாஜவினர், அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் ஏடிஎஸ்பி அசோகன், டிஎஸ்பி பவித்ரா, வட்டாட்சியர் பாஸ்கரன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படாததால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இருப்பினும் அதிகாரிகள் விடவில்லை. முதலில் பாரத மாதா சிலையின் மீது துணி சுற்றி வருவாய்த்துறை அதிகாரிகள் மறைத்தனர். அதன்பிறகு அந்த சிலையை பலத்த போலீஸ் பாதுகாப்போடு வருவாய்த்துறையினர் அகற்றி அங்கிருந்து எடுத்து சென்றனர். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரவோடு இரவாக இந்த சம்பவம் நடந்தது விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags : பாரதமாதாசிலையை அகற்றிய அதிகாரிகள்.

Share via