சென்னிமலை: கணவன் மனைவியை கொன்று நகை, பணம் கொள்ளை

by Staff / 10-09-2023 01:24:50pm
சென்னிமலை: கணவன் மனைவியை கொன்று நகை, பணம் கொள்ளை

சென்னிமலை அருகே தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வந்த கணவன், மனைவியை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.பெருந்துறையை அடுத்துள்ள சென்னிமலை, முருங்கத்தொழுவு ஊராட்சிக்கு உட்பட்டது, ஒட்டன்குட்டை. இங்குள்ள கரியாங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி கவுண்டர் (85). இவருடைய மனைவி சாமியாத்தாள் (74). இவர்களுக்கு வசந்தி, கலையரசி, கவிதா ஆகிய திருமணம் ஆன 3 மகள்கள் உள்ளனர். நேற்று காலை 7 மணி அளவில் கரியாங்காட்டு தோட்டத்தில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு கலையரசியின் மகன் அஜீத் சென்றுள்ளார்.

அப்போது வீட்டின் வெளிப்புற கதவு பாதி அளவில் திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது தனது தாத்தாவும், பாட்டியும் கொடூரமான முறையில் முகங்கள் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அஜீத் அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டிற்குள் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த துணிமணிகளும் கலைக்கப்பட்டு இருந்ததை கண்டார். பின்னர் உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சென்னிமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனடிப்படையில் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வயதான தம்பதிகளை கொலை செய்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில், முத்துசாமியின் வீட்டிலிருந்த சுமார் 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via