பனிமலையில் 38 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ராணுவ வீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

by Editor / 18-08-2022 08:03:06am
பனிமலையில் 38 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ராணுவ வீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

1984 ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் சண்டையின் போது ஆபரேஷன் மெக்தூத் திட்டத்தின்படி 20 பேர் கொண்ட ராணுவ வீரர்கள் அடங்கிய குழுவினர் சியாசின் பனிமலை பகுதிக்கு அனுப்பப்பட்டனர்.

அவர்களில் சந்திரசேகர் ஹெர்போலாவும் ஒருவர். 1984 ம் ஆண்டு இந்த ராணுவ குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட பனிச்சரிவு காரணாமாக 20 பேர் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். பனிப்பாறைகளில் சிக்கிய அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 15 பேர் இறந்த நிலையில் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் 5 பேரின் உடல்கள் கிடைக்கப்பெறவில்லை. அவர்களில் சந்திரசேகர் ஹெர்போலாவும் ஒருவர்.

இந்நிலையில் காணாமல் போன சந்திரசேகரின் உடலை 38 ஆண்டுகளுக்குப் பிறகு பழைய பதுங்கு குழியில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள்  கண்டெடுத்துள்ளனர். அவரது உடலின் சீருடைகளில் இருந்து கிடைத்த பெயர் பலகையைக் கொண்டு அவர் சந்திரசேகர் ஹெர்போலாதான் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.

அவருடன் வேறு ஒரு ராணுவ வீரரின் உடலும் கிடைத்த நிலையில் அவருடைய அடையாளம் இதுவரை தெரியவில்லை. உயிரிழந்த சந்திரசேகர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா பகுதியைச் சேர்ந்தவர். அவர் காணாமல் போன போது திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகி இருந்தது.

இந்நிலையில் உயிரிழந்த சந்திரசேகர் ஹர்போலாவின் உடல் அல்மோராவின் ஹல்த்வானி பகுதியில் உள்ள அவரது சொந்த இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்கு மேற்கொள்ளப்பட்டது.

 

 

Tags :

Share via

More stories