தண்ணீர் தொட்டியில் மூழ்கி அண்ணன், தம்பி பலி

by Staff / 10-09-2023 01:21:15pm
தண்ணீர் தொட்டியில் மூழ்கி அண்ணன், தம்பி பலி

சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள செங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. லாரி டிரைவர். இவருடைய மனைவி புஷ்பா. இவர்களுக்கு பத்மகுமார் (வயது 11), ஸ்ரீதர் (8), கிரிவாசன் (5) ஆகிய 3 மகன்கள் இருந்தனர். இதில் பத்மகுமார் சுக்கம்பட்டி அரசு பள்ளியில் 7-ம் வகுப்பும், ஸ்ரீதர் செங்காட்டூர் அரசு பள்ளியில் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர். இதனிடையே ராமசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலை நிமித்தமாக திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டார். நேற்று காலை புஷ்பா கூலி வேலைக்கு சென்றுவிட்டார். பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் நேற்று பத்மகுமார் தனது தம்பிகள் 2 பேருடன் அந்த பகுதியில் செங்கல் சூளைக்கு சென்றார். பின்னர் அவர்களில் கிரிவாசனை தவிர மற்ற 2 பேரும் ஆடைகளை கழற்றிவிட்டு செங்கல் தயாரிப்புக்கு தார்ப்பாயால் அமைக்கப்பட்டிருந்த 5 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் இறங்கி குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பத்மகுமாரும், ஸ்ரீதரும் தண்ணீரில் மூழ்கினர். இதை பார்த்த கிரிவாசன் அருகில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்று நடந்ததை கூறினான். இதையடுத்து அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர். அதற்குள் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர்.

 

Tags :

Share via