கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 6000 நிவாரண உதவியை தமிழக முதல்வர் எவ்வாறு கொடுக்கப் போகிறார்,,?
தமிழகத்தின் கஜானா காலியாக இருக்கக்கூடிய சூழலில் சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 6000 நிவாரண உதவியை தமிழக முதல்வர் எவ்வாறு கொடுக்கப் போகிறார் என்பது தெரியவில்லை என காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வ பெருந்தகை பேட்டி
தென்காசி மாவட்டம் குண்டாறு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் வழக்கறிஞர் பிரிவின் தலைவர் சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கத்தின் இரண்டாவது நாளான இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை கூறுகையில், சென்னையில் 47 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய கனமழை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக இழப்புகள் அதிகளவு ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் வருத்தத்திலும், கோபத்திலும் உள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாக இருக்கக்கூடிய சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹6000 நிவாரண உதவியை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் இந்த தமிழ்நாட்டின் கஜானா காலியாக இருக்கக்கூடிய சூழலில் எங்கிருந்து எந்த நிதியை திரட்டி மக்களுக்கு கொடுக்கப் போகிறார் என்பது தெரியவில்லை எனக் கூறியதோடு இவ்வாறு அறிவித்திருப்பது துணிச்சலான முடிவு எனவும் பாராட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த கனமழை பாதிப்பு காரணமாக மக்கள் தமிழக அரசு மீது கோபத்தில் இருப்பது உண்மைதான் எனவும் உரிமை இருக்க கூடிய இடத்தில் மக்கள் கோபத்தை காட்டுகின்றனர். ஆனால் தேர்தல் என்று வரும் பொழுது வாக்குகளை திமுக கூட்டணிகளுக்கு தான் செலுத்துவார்கள் எனவும் தெரிவித்தார்.
Tags : ரூபாய் 6000 நிவாரண உதவியை தமிழக முதல்வர் எவ்வாறு கொடுக்கப் போகிறார்,,?