கர்நாடக முதல்வரை கண்டித்து  தஞ்சையில் பாஜக ஆக.5-ல் போராட்டம்: மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு 

by Editor / 31-07-2021 12:35:39pm
கர்நாடக முதல்வரை கண்டித்து  தஞ்சையில் பாஜக ஆக.5-ல் போராட்டம்: மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு 



மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடக முதல்வரை கண்டித்து தஞ்சையில் பாஜக ஆக.5-ல் போராட்டம் நடத்தப்படும் என  மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்ட அம்மாநில அரசு முயற்சித்து வருகிறது. கர்நாடக பாஜக அரசின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை, மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என்று கூறியுள்ளார். இதற்கு தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.


இந்நிலையில், கர்நாடக முதல்வரின் பேச்சை கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 5-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி நதியால் பயன்பெறும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் அனுமதி பெறாமல் கர்நாடகாவில் அணை கட்ட முடியாது. மேகேதாட்டுவில் அணை கட்டஒரு செங்கலைக்கூட எடுத்துவைக்க அனுமதிக்க மாட்டோம். அணை கட்டியே தீருவோம்என்று கர்நாடக முதல்வர் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.


அம்மாநில முதல்வரின் பேச்சால் தமிழக விவசாயிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதை போக்கி, நம்பிக்கை ஏற்படுத்த, தஞ்சாவூரில் ஆகஸ்ட் 5-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via