93% ரேஷன் அட்டைகள் ஆதாா் எண்ணுடன் இணைப்பு :மத்திய அரசு விளக்கம் 

by Editor / 31-07-2021 12:51:33pm
93% ரேஷன் அட்டைகள் ஆதாா் எண்ணுடன் இணைப்பு :மத்திய அரசு விளக்கம் 


நாட்டில் இதுவரை 92.8 சதவீத ரேஷன் அட்டைகள், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரேஷன் கார்டு- ஆதார் எண் இணைப்பு குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சா் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துபூா்வமாக பதில் அளித்துள்ளார். அதில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 21.91 கோடி ரேசன் கார்டுகளை, அதாவது 92.8 சதவீத குடும்ப அட்டைகளை ஆதாா் எண்ணுடன் இணைக்கும் பணியை முடித்து விட்டன.


இதில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 70.94 கோடி (90 சதவீதம்) பயனாளிகள் உள்ளனா். கடந்த 23ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் உள்ள சுமாா் 4.98 லட்சம் ரேஷன் கடைகளில் (92.7 சதவீதம்) மின்னணு விற்பனை இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பொது விநியோக திட்டத்தின் கீழ் நாட்டில் 5.38 லட்சம் ரேஷன் கடைகள் செயல்பாட்டில் உள்ளன. உத்தர பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களுக்கு அடுத்தபடியாக பீகாரில் அதிக அளவிலான ரேசன் கடைகள் உள்ளன. உத்தர பிரதேசத்தில் 80,493, மகாராஷ்டிரத்தில் 52,532, பிகாரில் 47,032, தமிழகத்தில் 34,776 நியாய விலைக் கடைகள் உள்ளன.


2020-21 ஆம் ஆண்டில் காரீஃப் சந்தை பருவத்தில், 869.29 லட்சம் மெட்ரிக் டன் நெல்லும், 2021-22 ராபி சந்தை பருவத்தில் 433.32 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இது, இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமான கொள்முதலாகும் என்றும் மத்திய அமைச்சர் பதிலில் கூறியுள்ளார்.


 

 

Tags :

Share via