"உங்கள் சாதனைகளால் தேசமே பெருமை கொள்கிறது": தேநீர் விருந்தில் குடியரசுத்தலைவர்

by Admin / 15-08-2021 11:25:34am

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து வழங்கியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரது இல்லமான ராஷ்டிரபதி பவனில் தேநீர் விருந்து வழங்கியுள்ளார். இந்த விருந்தில் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தடகள வீரர் நீரஜ் சோப்ரா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் பேசிய குடியரசுத் தலைவர், "நாட்டிற்கு புகழ் சேர்த்த ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளை நினைத்து முழு நாடும் பெருமைகொள்கிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய தடகள வீரர்களுக்கு வாழ்த்துகள். இவர்கள் ஒலிம்பிக் வரலாற்றிலேயே அதிகப்படியான பதக்கங்களை நாட்டிற்காக குவித்துள்ளனர். நாடு இவர்களை நினைத்து பெருமை கொள்கிறது.சவால்களில் அபார திறமையை வெளிப்படுத்திய நமது வீராங்கனைகளை நினைத்து பெருமை கொள்கிறோம்.

இந்த பெருந்தொற்று காலத்தில் முடங்கியுள்ள எங்களுக்கு கொண்டாட்டத்திற்கான வாய்ப்பினை கொடுத்துள்ளீர்கள். சில நேரங்களில் நீங்கள் வெற்றிபெறலாம், சில நேரங்களில் தோற்கலாம். ஆனால், நீங்கள் விளையாட்டில் பங்கேற்கும்போது புதிய விசயங்களை கற்றுக்கொள்கிறீர்கள்." என்று கூறியுள்ளார்.மேலும், "பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் என உங்களை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். மேன்மேலும் அதிக சாதனைகள் புரிய உங்களுக்கு எனது வாழ்த்துகள்.

நீண்ட காலத்திற்கு பின்னர் நமது தேசியக்கொடி உயர்ந்துள்ளது. தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. அந்த தருணத்தில் நாட்டு மக்கள் அனைவரின் உணர்வுகளும் நீரஜ் சோப்ராவுடன் இணைந்திருந்தது. இந்த சாதனையானது நாட்டின் இளைஞர்கள் விளையாட்டின் பக்கம் திரும்ப உந்து சக்தியாக அமையும்" என்றும் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via