பொதுவுடமை இயக்கங்கள் இரண்டும் திமுக கூட்டணியில்....மூத்த தலைவர் ப.சிதம்பரம் சந்திப்பு......
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ப.சிதம்பரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர்கள் பெ.சண்முகம்,மு. வீரபாண்டியன் இருவரையும் தனித்தனியாக நேரில் சந்தித்து பேசி உள்ளார். சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைப்பிற்கு ஆதரவு வழங்கிய பொதுவுடமை இயக்கங்கள் தொடர்ந்து தாங்கள் திமுக கூட்டணியிலேயே நீடிப்பதாகவும் மதவாத கட்சிகள் உள்ளே புகுந்து விடக்கூடாது என்பதற்காகவே ஆட்சிக்கு ஆதரவாக ,ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததாக தெரிவித்திருந்தனர். சமீபத்தில் காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினராக அறிவிக்கப்பட்டிருக்கம் பிரவீன் சக்கரவர்த்தி தமக்கு ஆதரவு நல்கிய தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி என்கிற பதிவை செய்து இருந்ததால் ,அதற்கு பொதுவுடமை இயக்கத்தின் சார்பாக எதிர்ப்பை பெ. சண்முகம் வெளிப்படுத்தியிருந்தார். அப்பொழுது, அவர் இந்த கூட்டணிக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் நாங்கள் திமுக கூட்டணியிலேயே தொடர்கிறோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்தச் சூழ்நிலையில்தான், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி, இந்திய முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு நல்கியதோடு கூட்டணியிலும் பங்கு வகிக்க உள்ளதாகசொல்லப்பட்டது. ஆனால், பொதுவுடமை இயக்கங்கள் இரண்டும் தாங்கள் திமுக கூட்டணியில் தொடர்வதாக தெரிவித்ததின் அடிப்படையில் அவர்களையும் தமிழக வெற்றிக்கழக கூட்டணிக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காக இந்த பேச்சு நிகழ்ந்திருக்கலாம்என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Tags :


















