பாறை பள்ளத்தில் மூழ்கி பாட்டி, பேத்தி பலி
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மரிங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பச்சைக்கண்ணு. விவசாயி. இவரது மனைவி ராணி (57). இவர் நேற்று மதியம் தனது 7 வயது பேத்தி நதியாவுடன் கிராமத்தின் அருகே உள்ள நெடுந்தாம்பட்டி பாறை பள்ளத்திற்கு சென்று துணி துவைத்துள்ளார். பின்னர், இருவரும் தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சிறுமி நதியா எதிர்பாராத ஆழமான பகுதிக்கு சென்றதால், தண்ணீரில் மூழ்கினார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ராணி, சிறுமியை மீட்க முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரும் ஆழமான பகுதியில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் கீரனூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் பாறை பள்ளத்தில் இறங்கிதேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேர தேடலுக்கு பின்னர் ராணி, அவரது பேத்தி நதியா ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.
Tags :