லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி- கணக்கில் வராத பணம் பறிமுதல்!

by Editor / 01-10-2021 01:21:57pm
லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி- கணக்கில் வராத பணம் பறிமுதல்!

 

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, நீலகிரி மாவட்டம், உதகையில் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 78,495- யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 40,000-யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் செட்டிக்குளம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூபாய் 1.22 லட்சம் கைப்பற்றப்பட்டது. மேலும், வேலூர் மாவட்டத்தில் காட்பாடி வட்டார போக்குவரத்து சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனையில் ரூபாய் 77,000 பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்ட கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், கடலூர் மாவட்டம், பெண்ணாடம் சார் பதிவாளர் அலுவலகம், சென்னை திருவான்மியூரில் இயங்கிவரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத்துறையினர் அரசு அலுவலகங்களில் தொடர்ந்து சோதனை நடத்திவருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via