அலைகடல் ஓய்வதுமில்லை; அதிமுக சாய்வதுமில்லை - ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்தும் சோதனைக்கு கண்டனம் தெரிவித்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களது இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் நடைபெறும் சோதனைக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிக்கையில், அலைகடல் ஓய்வதுமில்லை; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சாய்வதுமில்லை! முன்னாள் அமைச்சர். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களிலும், அவரது உறவினர்கள் வாழும் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்ற பெயரில் திமுக அரசு, தனது பழிவாங்கும் உணர்ச்சிகளை மீண்டும் பகிரங்கப்படுத்தி, வக்கிர நடவடிக்கைகள் மூலம் தற்காலிக மகிழ்ச்சியைத் தேடி இருப்பது கண்டனத்திற்கு உரியது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொன்விழா கொண்டாடி வரும் எழுச்சிமிகு தருணத்தில்,
விழாக்களைக் கண்டு மனம் பொறுக்க முடியாத திமுக, விடிந்தவுடன் காவல் துறையை ஏவிவிட்டு லஞ்ச ஒழிப்பு என்ற பெயரில் கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆழம் காண முடியாத அலைகடலுக்கு ஒப்பான பேரியக்கம்; இந்த இயக்கம் திமுக-வின் முயற்சிகளால் முடங்கிடவோ, முடியாமற்போகவோ, ஒய்ந்து, சாயப்போவது இல்லை.
எத்தனை கழக நிர்வாகிகள் மீது என்னென்ன வழக்குகள் போட்டாலும், அவதூறு பரப்பினாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்காலத்தில் அடையப்போகும் வெற்றிகளை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags :