குழந்தையை  விற்பனை செய்த  கணவன், மனைவி,புரோக்கர்  உள்ளிட்ட 3 பேர் கைது.

by Editor / 13-09-2024 11:30:14pm
 குழந்தையை  விற்பனை செய்த  கணவன், மனைவி,புரோக்கர்  உள்ளிட்ட 3 பேர் கைது.

தேனி மாவட்டம் உப்புக்கோட்டை முத்தாலம்மன் கோவில் மேலத் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (44). இவரது இரண்டாவது மனைவி பாண்டீஸ்வரி.இந்த தம்பதிக்கு கடந்த 50 நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் சங்கர் தனது ஆண் குழந்தையை நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்களுக்கு ரூ.1.5 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ஆனால் சங்கர் குழந்தையை விற்பனை செய்யவில்லை என்றும்,அவரது மனைவி பாண்டீஸ்வரிக்கு மனநிலை சரியில்லாததால் குழந்தையை சங்கரின் அண்ணனிடம் ஒப்படைத்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக தேனி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சத்யா விசாரணை செய்திதில் குழந்தை விற்பனை செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சத்யா தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கை விசாரித்த போலீசார் குழந்தையை சங்கரிடமிருந்து ரூ. ஒரு லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கிய போடியைச் சேர்ந்த சிவக்குமார்(42) மற்றும் அவரது இரண்டாவது மனைவி உமாமகேஸ்வரி (36) மற்றும் குழந்தையின் தந்தை சங்கர் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசாரிடம் குழந்தையை வளர்ப்பதற்காக தத்தெடுத்ததாக சிவக்குமார் தெரிவித்தார்.பின்னர் சிவகுமாரின் பின்னணி குறித்து விசாரித்த போது சிவக்குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி முதல் மனைவி இல்லாத நிலையில் இரண்டாவதாக உமாமகேஸ்வரியை திருமணம் செய்தது தெரியவந்தது. மேலும் முதல் மனைவிக்கு 20 வயதில் ஒரு மகனும், இரண்டாவது மனைவியான உமாமகேஸ்வரிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளதும் தெரிய வந்தது.

ஏற்கனவே 15 வயதுக்கு மேல் மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் இந்த குழந்தையை ஏன் தத்தெடுத்தார் ?
என மர்மமாக இருந்ததால் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர்.போலீசாரின் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

மேலும் சிவக்குமார் குழந்தைகளை விலைக்கு வாங்கி குழந்தை இல்லாத தம்பதிகள் மற்றும்  மிகப்பெரிய கோடீஸ்வரர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு குழந்தைகளை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.மேலும் குழந்தைகளின் நிறம்,அழகு மற்றும் எடைக்குத் தகுந்தாற் போல் ஒரு குழந்தை குறைந்த பட்சம் ரூபாய் 6 லட்சம் முதல் 25 லட்சம் வரை விற்பனை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகின.மேலும் சிவக்குமார் பெண்களை வைத்து பாலியல் தொழிலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.இதற்காக சிவக்குமார் தான் பயன்படுத்தும் காரில் டாக்டர்கள் பயன்படுத்தும் வில்லையை ஒட்டி போலி டாக்டராக வலம் வந்ததும் தெரியவந்தது.இந்த காரை வைத்து குழந்தைகளை வாங்கி விற்பது மற்றும் பெண்களை அழைத்துச் சென்று விபச்சாரம் செய்வது உள்ளிட்ட தொழில் செய்து வந்துள்ளார்.இது தொடர்பாக ஏற்கனவே இரண்டு வழக்குகளும் அவர் மீது நிலுவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் குழந்தையை விலைக்கு வாங்கி விற்பனை செய்ததாக சிவக்குமார் மற்றும் அவரது இரண்டாவது மனைவி உமாமகேஸ்வரி மற்றும் குழந்தையின் தந்தை சங்கர் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்த தேனி அனைத்து மகளிர் காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 
 

 

Tags :  குழந்தையை  விற்பனை செய்த  கணவன், மனைவி,புரோக்கர்  உள்ளிட்ட 3 பேர் கைது.

Share via