ஜி.எஸ்.டி வரி குறைப்பு பத்தாது! - தமிழ்நாடு நிதியமைச்சர்!

by Editor / 13-06-2021 07:40:40am
ஜி.எஸ்.டி வரி குறைப்பு பத்தாது! - தமிழ்நாடு நிதியமைச்சர்!

கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் கருவிகளுக்கான ஜிஎஸ்டி வரிக்குறைப்பு, போதுமானது அல்ல என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

4வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். அவர், அந்த கூட்டத்தில் பேசியது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் கருவிகளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க, 7 மாநில உறுப்பினர்களை கொண்ட அமைச்சர்கள் குழு பரிந்துரைத்தாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை ஏற்புடையதாக இல்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாகவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் கருவிகள் மீது பூஜ்ய விகிதம் அல்லது பூஜ்யம் புள்ளி ஒன்று சதவிகிதம் வரி தான் விதிக்க வேண்டும் என கூட்டத்தில் அமைச்சர் வலியுறுத்தியதாகவும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொடர்பான மருந்துகள் மற்றும் கருவிகள் மீது குறிப்பிட்ட காலத்திற்கு பூஜ்ய விகித வரி நிர்ணயிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாகவும் தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

 

Tags :

Share via