பொள்ளாச்சி வழக்கில் எஸ்.ஐ., உள்பட 7 காவலர்கள் சஸ்பெண்ட்

by Editor / 21-10-2021 05:39:13pm
பொள்ளாச்சி வழக்கில் எஸ்.ஐ., உள்பட 7 காவலர்கள் சஸ்பெண்ட்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான ஒன்பது பேர் (திருநாவுக்கரசு, சபரி ராஜன், மணிவண்ணன், வசந்த் குமார், சதீஷ், பாபு, ஹெரைன் பால், அருளானந்தம், அருண்குமார்)கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி வழக்கு விசாரணையை வரும் அக். 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் கடந்த 21ஆம் தேதி குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டதில், விடுபட்ட குற்றப்பத்திரிகை நகல்களின் சில நகல்கள்  ஒன்பது பேரிடமும் வழங்கப்பட்டன.


பின்னர், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் இருந்த காவல் துறை வாகனம், (TN 30 G 0453) கோயம்புத்தூர் சித்ரா விமான நிலையம் அருகே திடீரென நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, அங்கு காத்திருந்த குற்றம்சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களைச் சந்தித்து உரையாடினர்.


குறிப்பாக, பாலியல் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, சபரி ராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், வசந்த் குமார், சதீஷ் ஆகிய 5 பேர் அந்த வாகனத்தில் இருந்தனர். உறவினர்களிடம் அவர்கள் பேசிய பின்னர், அந்த வாகனம் சேலம் மத்திய சிறையை நோக்கிச் சென்றது.


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டபட்டவர்கள், தங்களது உறவினர்களைச் சந்தித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்திய சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோதா, சிறப்பு காவல் ஆய்வாளர் உள்பட ஏழு பேரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Tags :

Share via