கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடைதிறப்பு

by Editor / 15-11-2021 08:33:04pm
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடைதிறப்பு

ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து வருவதால் மண்டல பூஜையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  


கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம் என்ற நிலையில், இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பபட்டது.புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டு மேல்சாந்திகள் பதவியேற்கவுள்ளனர். நாளை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி கோயிலுக்கு வரவுள்ள நிலையில், இணைய வழி அனுமதி மூலம் தினசரி 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.இப்போது வரை கோவிலுக்கு தரிசனம் செய்ய  முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவசம்போர்டு செய்துள்ளது.கனமழை எச்சரிக்கை காரணமாக நேரில் வந்து பதிவு செய்யும் வசதி தற்காலிகமாக 3 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் தெரிவித்துள்ளார். பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் பக்தர்கள் நீராட அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது. ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை டிசம்பர் 26ஆம் தேதி வரையும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரவேண்டிய ஆவணங்கள், பயணிக்கும் சாலை, அதற்கான வாகன வசதி பற்றிய தகவல்களையும் தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது.அதன்படி சபரிமலை ஐய்யப்ப பக்தர்கள் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பம்பையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு 340 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.


இதில் சொகுசு மற்றும் விரைவு பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதில் குளிர்சாதன வசதி கொண்ட 100 பஸ்களும், குளிர்சாதனவசதி இல்லாத 80 பஸ்களும் அடங்கும். இந்த சிறப்பு பஸ் போக்குவரத்து பம்பையில் இருந்து (12-ந்தேதி) முதல் இயக்கப்பட்டு வருகிறது.


இதுமட்டுமல்லாது ஆன்லைன் மூலம் பதிவு செய்தும் பஸ்களில் பயணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு குழுக்களாக வரும் பக்தர்கள் 40 பேர் வரை ஒன்றாக முன்பதிவு செய்து பயணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுபோல சபரிமலைக்கு வரும் பக்தர்களின் மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் பம்பை பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் 90 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via