அபிஷேகப்பிரியர் சிவபெருமான்

by Editor / 15-12-2021 08:29:12am
அபிஷேகப்பிரியர் சிவபெருமான்

 தென்னாடுடைய சிவனார் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் குளிர குளிர அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடந்தேறும். கண்ணாரத் தரிசித்து மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.

கார்த்திகை மாதம் விசேஷம். அதேபோல் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு ரொம்பவே விசேஷம். கார்த்திகை மாதத்தின் சோமவாரம் என்பது இன்னும் மகத்தானதாக போற்றப்படுகிறது.

சங்கு என்பது புனிதமான பொருட்களில் ஒன்று என்கிறது புராணம். மகாவிஷ்ணு தன் திருக்கரத்தில் சங்கு வைத்திருக்கிறார் சங்குடன் அபயம் அளிக்கிறார் என்கிறது விஷ்ணு புராணம்.

சங்கு வைத்திருப்பதும் சங்குக்கு பூஜைகள் செய்வதும் சங்கினைக் கொண்டே பூஜைகள் செய்வதும் எண்ணற்ற பலன்களை வழங்கவல்லது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சோமவாரம் என்றால் திங்கட்கிழமை. திங்கள் என்பது சந்திரனைக் குறிக்கும். சந்திரனைப் பிறையெனச் சூடிக்கொண்டிரு க்கிறார் சிவபெருமான் என்கிறது புராணம்.

அதனால்தான், சோமவாரம் என்கிற திங்கட்கிழமையில் சிவனாருக்கு வழிபாடுகள் அமர்க்களப்படுகின்றன. அதனால்தான் சிவபெருமானுக்கு சோமநாதன், சோமேஸ்வரர், சந்திர சூடேஸ்வரர் என்றெல்லாம் திருநாமங்கள் அமைந்தன.

சிவனார் அபிஷேகப் பிரியன். அந்த அபிஷேகப்பிரியனுக்கு சங்கு கொண்டு அபிஷேகிப்பதை தரிசித்தால், மும்மடங்குப் பலன்கள் கிடைக்கப் பெறலாம். முக்தி நிச்சயம். இம்மையிலும் நன்மை, மறுமையிலும் நன்மையைத் தந்தருள்வார் சிவபெருமான் என்று போற்றுகிறார்கள் சிவாச்சார்யர்கள்.

சங்காபிஷேகத்தை தரிசியுங்கள். சந்தோஷமாய் வாழ அருளுவான் சங்கரன்!

 

Tags :

Share via