கேரளாவில் கடந்த ஆண்டு மட்டும் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்புக்கு கொரோனாவால் பலியானோர் காரணமா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

by Admin / 03-01-2022 03:09:45pm
கேரளாவில் கடந்த ஆண்டு மட்டும் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்புக்கு கொரோனாவால் பலியானோர் காரணமா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கேரளாவில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் கொரோனா பரவல் ஏற்பட்டது.கடந்த ஆண்டு கொரோனா பரவல் மேலும் தீவிரமடைந்து பலர் பலியானார்கள். இதை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து உள்ளாட்சி துறையின் பிறப்பு - இறப்பு பதிவேடுகளில் உள்ள தகவல்கள் சமீபத்தில் வெளியானது.

இதில் 2020-ம் ஆண்டைவிட கடந்த 2021ஆண்டு மரணமடைந்தோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பது தெரிய வந்தது.

கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 2.69 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளனர். இது2020-ம் ஆண்டைவிட 10 சதவீதம் அதிகம் ஆகும்.அதாவது 2020-ம் ஆண்டைவிட கடந்த ஆண்டு 25 ஆயிரம் பேர் கூடுதலாக மரணம் அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு மட்டும் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்புக்கு கொரோனாவால் பலியானோர் காரணமா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கையை மாநில அரசு குறைத்து அறிவிப்பதாக காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் புகார் தெரிவித்து இருந்தனர்.

இதற்கு மாநில அரசு மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது உள்ளாட்சித்துறை பதிவேடுகள் மூலம் 10 சதவீதம் மரண விகிதம் அதிகரித்துள்ளது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு வயநாடு,கன்னூர், மற்றும் காசர் கோடு மாவட்டங்களில் தான் மரணவிகிதம் அதிகரித்துள்ளது. திருவனந்தபுரம், கோட்டயம் மாவட்டங்களில் 1000 முதல் 5 ஆயிரம் வரை மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

இது தொடர்பாக சுகாதாரத்துறையின் கொரோனா கண்காணிப்பு அதிகாரிகள் கூறும்போது,கடந்த ஆண்டு மரண விகிதம் அதிகரிக்க குறிப்பிடத்தக்க காரணங்கள் எதுவும் இல்லை.

கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக மரண விகிதம் அதிகரித்து இருக்கலாம். மேலும் 2020-ம் ஆண்டில் மாநிலத்தில் 309 பஞ்சாயத்துகளில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை பதிவு செய்யப்படவில்லை.

அதன் காரணாகவும் கடந்த ஆண்டு மரண விகிதம் அதிகரித்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே முறையாக விசாரணை நடத்திய பின்னரே இது குறித்து தெரியவரும் என்றனர்.

 

Tags :

Share via